மழையோடு வரும் அக்டோபர்.. வெள்ளத்தை தவிர்க்க என்ன செய்வது? முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை
சென்னை: வரும் அக்டோபர் முதல் வாரம் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதால் மழையை எதிர்கொள்வது மற்றும் வெள்ள பாதிப்புகளை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து துறைகளின் அமைச்சர்கள் பங்கேற்றனர். வரும் அக்டோபர் மாதம் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது.
இது தொடர்பாக முதலமைச்சர் அமைச்சர்களுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அதேபோல் மக்கள் நலன் சார்ந்த புதிய திட்டங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள திட்டங்களின் விரிவாக்கத்திற்கு அனுமதிகள் வழங்கப்படுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
செப்.26ல் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்.. முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு!
பரந்தூர் விமான நிலையம்
சென்னையை அடுத்த பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பது, ஆன்லைன் ரம்மி தடை சட்டம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அனைத்து அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த அறிவுறுத்தல்களை முதலமைச்சர் வழங்கியதாகவும் கூறப்படுகின்றன.
ஆன்லைன் ரம்மி
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது சட்டப்பேரவை கூட்டத்திற்கு முன்னதாக நடைபெற்ற இக்கூட்டத்தில், அதுதொடர்பாக ஆலோசிக்கப்பட்டது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா மரண வழக்கு
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு படுகொலை தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணை அறிக்கை, ஸ்மார்ட் சிட்டி முறைகேடு குறித்தை விசாரணை அறிக்கை ஆகியவற்றை சட்டமன்றத்தில் தாக்கல் செய்வது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அரசின் திட்டங்கள்
தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து துறை வாரியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுடன் ஆலோசித்ததாகவும் தெரிகிறது. அத்துடன் நிலுவையில் இருக்கும் சட்ட மசோதாக்கள், புதிய சட்ட மசோதாக்கள், தொழில் வாய்ப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலமைச்சர் கூட்டம்
இந்த நிலையில் இன்று காலை 10:30 மணியளவில் மழையை எதிர்கொள்வது, வெள்ள பாதிப்புகளை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இதில் மூத்த அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் துறை செயலாளர்கள், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டார்கள்.