பிப்.19ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்.. சிறப்பு வேளாண் மண்டலம் பற்றி முடிவெடுக்க வாய்ப்பு.. அதிரடி!
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி ஆட்சி பொறுப்பேற்ற போது, அவர் எத்தனை நாட்கள் இந்த பொறுப்பில் இருப்பார் என்று கேள்விகள் எழுந்தது. பலரும் அதிமுக ஆட்சி மீது அப்போது நம்பிக்கை கொள்ளவில்லை. ஆனால் போக போக ஆட்சியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார் முதல்வர் பழனிசாமி.
இப்போது அவர் 3 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்து நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இந்த நிலையில் தமிழக அரசு கடந்த சில தினங்களாக அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. 2021 சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு தமிழக அரசு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
முக்கியமாக 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டு பொதுத்தேர்வு நடத்தப்படாது என்று தமிழக அரசு அறிவித்தது.அடுத்த அதிரடியாக காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதற்கான சட்டம் கொண்டுவரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
டெல்டா மாவட்டங்களை ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது, அங்கு விவசாயிகள் முன்னேற்றம் அடைய சட்டங்கள் கொண்டு வரப்படும், புதிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
முதல்வராக எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்தக்கூட்டத்தில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அதேபோல் இதே சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் இதை சட்டமாக்கும் வகையிலும் ஆலோசனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் நகராட்சி, மாநகராட்சி தேர்தல் குறித்து இதில் ஆலோசனை செய்யப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.