தென்னிந்தியா முழுவதும் கேபிள் கட்.. தமிழகத்திலும் தெரியவில்லை.. காரணம் ஆபரேட்டர்கள் ஸ்டிரைக்!
கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஸ்டிரைக் காரணமாக பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
Recommended Video
சென்னை: தமிழகம் முழுவதும் காலையிலிருந்து யார் வீட்டிலேயும் கேபிள் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் நடத்தி வரும் ஸ்டிரைக் காரணமாகவே இந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.
டிராய் அதாவது மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது, கேபிள் மற்றும் டிடிஎச் சேவை பற்றி சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
அதன்படி, கஸ்டமர்கள் 100 இலவச சேனல்களை அடிப்படை கட்டணம் 155 ரூபாயில் பெறலாம் என்றும் அதற்கு மேல் கட்டண சேனல்களை மக்களே தேர்வு செய்து அதற்குரிய கட்டணத்தை செலுத்தலாம் என்றும் அறிவித்திருந்தது. கூடவே இது பிப்ரவரி 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது என்று ஒரு நாளையும் குறித்துவிட்டது.
பாதிப்பு
இந்த விதிமுறைகளை கேட்டதும், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அதிர்ந்து போனார்கள். ஏனென்றால் இந்த புதிய முறையால் எப்படியும் கேபிள் டிவி கட்டணம் 200 ரூபாய்க்கு மேல் வந்துவிடும், இதனால் பொதுமக்களும் பாதித்து, தாங்களும் பாதிக்கப்படுவோம் என்று குற்றம் சாட்டினார்கள்.
டிராய் நிறுவனம்
இப்போது 150 ரூபாய் கொடுத்து, பார்த்து கொண்டிருந்த கேபிள் டிவி தொகையை, 450 ரூபாய் கொடுத்து அனைத்து எல்லா சேனலையும் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் பெரிய பெரிய நிறுவனங்களுக்கு எல்லாம் டிராய் சாதகமாக செயல்படுகிறது என்றும் பகிரங்க கண்டனத்தையும் தெரிவித்தார்கள்.
ஒருநாள் ஸ்டிரைக்
தங்களின் எதிர்ப்பை காட்டதான், இன்றைய தினம் தென்னிந்தியா முழுவதும் ஸ்டிரைக் நடத்த போவதாக 2 தினங்களுக்கு முன்பு அறிவிப்பும் செய்தார்கள். அதன்படி, தமிழக கேபிள் ஆபரேட்டர்கள் சங்கம் இன்று காலை முதல் ஸ்டிரைக்கை தொடங்கியது.
பேரணி நடத்துவோம்
தமிழ்நாட்டை பொறுத்தளவில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தங்களது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் அடுத்த கட்டமாக ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி நடத்துவோம் என்றும் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் அறிவித்துள்ளனர்
மக்கள் அவதி
காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை என ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் என்றாலும் பொதுமக்கள் ரொம்பவே சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். ஏழை, எளிய மக்கள் குறிப்பாக இல்லத்தரசிகள் வீட்டில் கேபிள் இல்லாமல் போனதால், செய்திகள், சீரியல் பார்க்க முடியாமல் தவித்து வருகின்றனர்.