தமிழக அரசுக்கு உங்கள் குரல் கேட்க வேண்டுமா? எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த சூப்பர் திட்டம்
சென்னை: தற்போதுள்ள திட்டங்கள் மற்றும் எதிர்கால நலத்திட்டங்கள் குறித்து கருத்துக் கணிப்புகளை நமது அரசு (http://tamilnadu.mygov.in) என்ற வலைதளத்தில் இனி தமிழக அரசு நடத்தப்போவதாகவும் அதன் அடிப்படையில் புதிய திட்டங்கள் வகுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
அத்துடன் அரசுக்கு பல்வேறு திட்டங்கள் தொடர்பாக ஆலோசனைகள் அளிக்கலாம் என்றும் பொதுமக்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட செய்தியில், "தகவல் தொழில்நுட்பவியல் துறையின் 2017-18 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில், தமிழக மக்கள் அனைவரும் வலைதளம் வாயிலாக கருத்துக் கணிப்புகள், ஆய்வுகள், விவாதங்கள் போன்றவற்றில் ஆர்வத்துடன் பங்கேற்கலாம்
வலைதளம் ரெடி
அதன் மூலம் தமது கருத்துகளைச் சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் வலைப்பதிவுகள் மூலமாக அரசுக்குத் தெரிவிக்க உதவும் வகையில் 'நமது அரசு' (http://tamilnadu.mygov.in) என்ற பொதுமக்களுக்கான தமிழ்நாடு அரசின் வலைதளம் தமிழ்நாடு மின்னாளுமை ஆணையரகத்தால் உருவாக்கப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
மக்கள் நலன் சார்ந்தவை
அந்த அறிவிப்புக்கிணங்க, தமிழ்நாடு அரசின் 'நமது அரசு' வலைதளம் 91 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு மின்னாளுமை ஆணையரகத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த வலைதளமானது, அரசின் நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கும், அரசுக்குமிடையே உரையாடல்கள் வாயிலாக கருத்துப் பரிமாற்றம் செய்து, மக்கள் நலன் சார்ந்த நேர்வுகளில் அரசுக்கு ஆலோசனைகள் வழங்கும் தளமாக இருந்து உதவும்.
கருத்துக் கணிப்புகள்
மேலும், கலந்துரையாடல், செயல்பாடுகள், தகவல்களைப் பரப்புதல், படைப்புத்தளம், கருத்துக்களம், கருத்துக் கணிப்புகள் போன்ற முக்கிய அம்சங்களைக் கொண்டு மக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்கள் மற்றும் வாக்கெடுப்புகளின் அடிப்படையில் அரசுச் சேவைகளைச் செம்மையாகச் செயல்படுத்த இது உதவும்.
தமிழக அரசு
'நமது அரசு" வலைதளம், பொதுமக்களுக்கும், அரசுக்குமிடையில் ஒரு புதிய நல்லுறவை ஏற்படுத்துவதோடு, அரசு இயந்திரத்தை எளிதாக மின்னணு வழியில் தொடர்பு கொள்ளவும் உதவும். மேலும், தற்போதுள்ள திட்டங்கள் மற்றும் எதிர்கால நலத்திட்டங்கள் குறித்து கருத்துக் கணிப்புகளைப் பெற்று, அவற்றை மேம்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான ஆலோசனைகளை மேற்கொள்ளவும், மக்களின் தேவைகளுக்கேற்ப புதிய திட்டங்களை வகுக்கவும் அரசுக்கு உறுதுணையாக அமையும்". இவ்வாறு தமிழக அரசு கூறியுள்ளது.