“மாநிலங்களை ஆண்ட இசைஞானி” - இளையராஜாவுக்கு மிட் நைட்டில் வாழ்த்து சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை: இசையால் நம் உள்ளங்களையும் மாநிலங்களையும் ஆண்ட 'இசைஞானி' இளைஞராஜா அவர்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினராய்ச் சிறப்புறச் செயல்பட வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
Recommended Video
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் 12 பேர் நியமன உறுப்பினர்களாக உள்ளனர். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மாநிலங்களவை நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்தான்.
மோடிஜியின் எண்ணங்களுக்கு மனமார்ந்த நன்றி - ட்விட்டரில் நியமன எம்பி இளையராஜா பதிவு
மாநிலங்களவை நியமன எம்.பிக்கள்
அதன் அடிப்படையில் தற்போது மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எம்.பிக்களாக நியமித்து இருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
இதுகுறித்து இளையராஜாவை வாழ்த்தி ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி, "சாதாரண பின்னணியில் இருந்து வந்து மிகப் பெரிய சாதனை படைத்துள்ளார் இளையராஜா. இசையின் மூலம் மனித உணர்வுகளை அழகாய் பிரதிபலித்தவர் இளையராஜா. அவர் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதில் மகிழ்ச்சி அடைகிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
நன்றி சொன்ன இளையராஜா
பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்துக்கு பதிலளித்து இருக்கும் இளையராஜா, "மோடிஜியின் எண்ணங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இசை, கலை மற்றும் கலாச்சாரத்தின் அழகை நம் சமூகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதற்கான வாய்ப்பு இது." என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கு முன்பாக இளையராஜாவின் 80 வது பிறந்தநாளுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு
இந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட இளையராஜாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இசையால் நம் உள்ளங்களையும் மாநிலங்களையும் ஆண்ட 'இசைஞானி' இளைஞராஜா அவர்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினராய்ச் சிறப்புறச் செயல்பட வாழ்த்துகள்." என குறிப்பிட்டு இருக்கிறார்.
வாழ்த்தியவர்களுக்கு நன்றி
இதற்கிடையே தன்னை வாழ்த்தியவர்களுக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார் இளையராஜா. அதில், "என்மீது அன்பு கொண்ட ஏராளமான அபிமானிகள் இந்திய அரசு எனக்களித்த கௌரவமான அங்கீகாரத்திற்காகப் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்திருந்த வண்ணமிருக்கின்றனர் . உங்கள் அனைவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல இயலாதாகையால் எல்லோருக்கும் என் உளங்கனிந்த நன்றி." என்று குறிப்பிட்டுள்ளார்.