தமிழகத்தில் டிசம்பர் மாத இறுதியில் உள்ளாட்சித் தேர்தல்?.. மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை?
சென்னை: தமிழகத்தில் வரும் டிசம்பர் இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் கூறுகின்றன.
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இந்த நிலையில் கோர்ட் தலையிட்டு தேர்தலை நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து தேர்தலை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தி முடித்துவிட மாநில தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளது. டிசம்பர் இறுதியில் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படும் என்பதால் தேர்வுக்கு இடையூறு ஏற்படாத வகையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலின் போது பணியாற்ற 6 லட்சம் தேர்தல் பணியாளர்களின் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி அமைப்புகளிடம் கேட்டுள்ளது.
அது போல் அரையாண்டு தேர்வு அட்டவணைகளை வழங்குமாறு பள்ளிக் கல்வித் துறை, உயர்கல்வித் துறை அதிகாரிகளிடம் மாநில தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது. இதனால் வரும் டிசம்பர் 23-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
அது போல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து தமிழகத்தில் டிசம்பர் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த பரிந்துரை செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.