அடிமை சாசனத்தில் கையெழுத்திட எடப்பாடி அரசு ரெடியாகிவிட்டது.. திமுக எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் மும்மொழி பாடத் திட்டத்தை அமல்படுத்த, மறைமுகமாக ஒப்புதல் அளித்துள்ளதன் மூலமாக அடிமை சாசனத்தில் கையெழுத்திட எடப்பாடி பழனிச்சாமி அரசு தயாராகி விட்டதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிற மாநிலங்களில் மூன்றாவது பாடமாக தமிழை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை மென்ஷன் செய்து, ட்விட்டரில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று, கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் ஆர்எஸ்.பாரதி அளித்த பேட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று அவர் கூறியதாவது:
கருணாநிதியின் அரசியல் நுழைவுக்கு காரணமாக இருந்தது இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம்தான். 1938 ஆம் ஆண்டு, திருவாரூர் வீதிகளில் தமிழ் கொடியை ஏந்தியபடி, 14 வயது சிறுவனாக, இந்தியை எதிர்த்து வீதிகளில் குரல் எழுப்பிய கருணாநிதிதான் பிற்காலத்தில் திமுக தலைவராக ஐம்பதாண்டு காலம் பதவி வகித்தார்.
10 வருடங்களுக்கு ஒருமுறை, இதுபோன்ற மிரட்டல் மத்திய அரசிடம் இருந்து வருவது வாடிக்கையாகிவிட்டது. 1963ம் ஆண்டு, 1965ம் ஆண்டு, 1980 மற்றும் 1986 ஆகிய ஆண்டுகளில் இந்தி திணிப்பு ஆபத்து தமிழகத்தை எட்டிப்பார்த்தது. தற்போது, பாஜக ஆட்சியில் கஸ்தூரிரங்கன் அறிக்கை என்ற பெயரில் தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சி எடுக்கப்படுகிறது.
பிற மாநிலங்களில் தமிழ் பாடம்.. எடப்பாடி கோரிக்கையில் சந்தோஷப்பட ஏதுமில்லை.. ஆபத்து நமக்குதான்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஏறத்தாழ தமிழகத்தின் அனைத்து அரசியல் தலைவர்களும் குரல் எழுப்பியதன் விளைவாக, கஸ்தூரிரங்கன் ஆணையத்தின் பரிந்துரையை அமல்படுத்த மாட்டோம் என்று மத்திய அரசு சொல்லி உள்ளது. ஆனால் இடையில் ஒரு வாக்குறுதி கொடுத்துவிட்டு, மீறுவது என்பது இவர்களின் வாடிக்கை.
1968ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா கொண்டு வந்த இருமொழிக் கொள்கை திட்டம் தான் தமிழகத்தில் இருக்க வேண்டும். இதனால்தான் தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள்தான் உலகம் முழுக்க புகழ் பெற்று பல்வேறு பொறுப்புகளில் உள்ளனர். அமெரிக்காவில் உயர்பதவிகளில் இருக்கக்கூடிய இந்தியர்கள் பலரும் தமிழர்கள் தான்.
ஆனால், எடப்பாடி இந்த வரலாற்றையெல்லாம் மறைத்து விடும் வகையில், அடிமை சாசனத்தில் கையெழுத்திடும் வகையில், தமிழைப் பிற மாநிலங்களை பயிற்று மொழியாக கொண்டு வர வேண்டும் என்று மோடியை குறிப்பிட்டு சொல்லியுள்ளது, மறைமுகமாக மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்வதாக பொருள்.
எனவே, முதல்வர் தெளிவாக பதில் சொல்ல வேண்டும். ஆணா, பெண்ணா என்று கேள்வி கேட்டால், ஏதாவது ஒரு பதிலை சொல்ல வேண்டும். அண்ணா கொண்டு வந்த இருமொழிக்கொள்கை உங்கள் கொள்கையா? அல்லது மும்மொழி திட்டத்தை, நீங்கள் ஏற்கப் போகிறீர்களா என்ற கேள்விக்கு தெளிவான பதிலை முதல்வர் சொல்ல வேண்டும்.
பிற மாநிலங்களில், தமிழை, பயிற்று மொழியாக கொண்டு வர வேண்டும் என்ற முதல்வரின், கருத்து, மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டதன் அர்த்தம்தான். இவ்வாறு கடுமையாக விமர்சனம் செய்தார் ஆர்.எஸ்.பாரதி.