பிற மாநிலங்களில் தமிழ் பாடம்.. எடப்பாடி கோரிக்கையில் சந்தோஷப்பட ஏதுமில்லை.. ஆபத்து நமக்குதான்
சென்னை: பிற மாநிலங்களில், தமிழ் பாடத்தை ஒரு விருப்பத்தேர்வாக அறிமுகம் செய்யும்படி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தக் கோரிக்கையை டுவிட்டர் வாயிலாக அவர் வெளியிட்டுள்ள நிலையில், இதைப்பார்த்த நெட்டிசன்கள், ஆஹா.. தமிழக முதலமைச்சரின் அருமையான பதிலடி என்று சிலாகித்து வருகிறார்கள்.
இது உண்மையிலேயே பதிலடி தானா, அல்லது ஹிந்தி திணிப்புக்கு மறைமுகமான ஆதரவை அளிக்கும் செயலா, என்பது விவாதப் பொருளாகி உள்ளது.
இரு மொழிக் கொள்கை
தமிழகத்தில் தற்போது இருமொழிக் கல்விக் கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. தாய்மொழி தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகியவை கற்றுத்தரப்படுகிறது. ஆனால், மத்திய அரசு, மும்மொழிக் கொள்கையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில், தமிழ், ஆங்கிலம் தவிர, ஹிந்தியையும் கட்டாயமாக்கப்படும் நிலை உருவானது.
ஹிந்திதான் கட்டாயமாகும்
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், மூன்றாவது மொழியாக, வேறு மாநில மொழியுடன், ஹிந்தியையும் விருப்பத்தேர்வாக வழங்கலாம் என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளது. மாணவர்கள், கன்னடத்தை அல்லது வங்க மொழியை எடுப்பதைவிட ஹிந்தியை தேர்ந்தெடுப்பதையே விரும்புவார்கள் என்பதால் மறைமுகமாக இதுவும் ஹிந்தி திணிப்பு நடவடிக்கைதான் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
பாடச்சுமை
எனவே 3 மொழி பாடத்திட்டம் என்பது நமக்கு வேண்டவே வேண்டாம். கல்வி சுமையை மாணவர்களிடம் இன்னும் அது அதிகரித்துவிடும். இருமொழி பாடத்திட்டமே தொடர வேண்டும் என்பது பெரும்பாலான கல்வியாளர்கள் கருத்தாக உள்ளது. இந்த நிலையில்தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கருத்தை ஒப்பிட்டு பார்க்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
குஷிப்பட தேவையில்லை
பிற மாநிலங்களில் தமிழை ஒரு விருப்பப் பாடமாக அறிமுகம் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளதை கேட்டு, புளகாங்கிதம் அடையும் நிலையில் நாம் இல்லை. ஏனெனில் இதன் பொருள் என்னவென்றால், மும்மொழித் திட்டத்தை தமிழக முதல்வர் ஏற்றுக் கொண்டார் என்பதுதான்.
ஏற்றுக்கொண்ட முதல்வர்
தமிழகத்தில் மும்மொழி பாடத்திட்டத்தை ஏற்றுக் கொள்வதைப் போல, பிற மாநிலங்களிலும் மும்மொழி பாடத் திட்டத்தை அமல்படுத்தி, அதில் தமிழை ஒரு விருப்பப் பாடமாக சேர்க்க வேண்டும் என்பதுதான் எடப்பாடி பழனிச்சாமி கருத்தின் பொருள். ஆக, மத்திய அரசுக்கு, பதிலடி கொடுப்பது போல இருக்கக் கூடிய இந்த கருத்தின் பின்னணியில், ஹிந்தி திணிப்புக்கு அச்சாரம் போடப்பட்டுள்ளது என்பது தான் உண்மை என்கிறார்கள் கல்வியாளர்கள்.