கலெக்டர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை.. ஊரடங்கு நீட்டிப்பு பற்றி இன்று முக்கிய முடிவு?
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது மற்றும் வேறு தளர்வுகள் அமல்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் நாளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.
நாடு முழுக்க தற்போது நான்காவது கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பொதுப்போக்குவரத்து இன்னும் தொடங்கவில்லை என்ற போதிலும், ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
மே 31ஆம் தேதியுடன் இந்த ஊரடங்கு காலம் முடிவடைகிறது. இதையடுத்து ஜூன் 15ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில்தான், நேற்றுமுன்தினம், மருத்துவ நிபுணர் குழு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தி இருந்தது.
அப்போது, கொரோனா நோய் பரவலை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஊரடங்கை முழுமையாக தளர்த்த வேண்டாம் என்று, மருத்துவ நிபுணர் குழு அப்போது பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.
ஜூன் 15 வரை ஊரடங்கு.. 11 நகரங்கள் இலக்கு.. வெளியான முக்கிய தகவல்.. எப்படி இருக்கும் லாக்டவுன் 5.0
இந்த நிலையில்தான்தான், நாளை காலை, 10 மணிக்கு, தலைமை செயலகத்தில், வீடியோ கான்பரன்ஸ் வழியாக, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். இதில், அனைத்து துறை அலுவலர்கள், சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும், தற்போது கொரோனா பரவல் நிலை குறித்து, முதல்வர் ஆய்வு செய்வதுடன், ஊரடங்கை தளர்த்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
ஏனெனில் 5-வது கட்ட ஊரடங்கு காலத்தில் மாநில அரசு பெரும்பாலான முக்கிய முடிவுகளை எடுத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.