ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மறைவு... முதல்வர் மற்றும் துணை முதல்வர் இரங்கல்
சென்னை: ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த வாரம் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் மாதவராவ் என்ற வேட்பாளர் போட்டியிட்டார். இருப்பினும், பிரசாரத்தின் போதே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனால் அவர் கடந்த 20ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து தேர்தல் பிரசார பணிகளை அவரது மகளும் கூட்டணி கட்சியினரும் கவனித்தனர். நுரையீரல் தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்த மாதவராவ்விற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இன்று காலை உயிரிழப்பு
வாக்குப்பதிவு நடந்து முடிந்து ஐந்து நாட்கள் மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில், சிகிச்சை பலனிற்றி மாதவராவ் இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் இரங்கல்
இந்நிலையில். மாதவராவ் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இரங்கல் செய்தியில், ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம்
மேலும், துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் தனது ட்விட்டரில், கொரோனா தொற்றுக்குள்ளாகி, சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
வென்றால் இடைத்தேர்தல்
வாக்குப்பதிவு ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டதால், அனைத்து தொகுதிகளுடன் சேர்த்து ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியின் வாக்கு எண்ணிக்கையும் திட்டமிட்டபடி மே 6ஐம் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் தேர்தலில் மாதவராவ் வெற்றிபெறும்பட்சத்தில் மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் எனத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்