பட்ஜெட் தரமாகவும், மக்களுக்கு பயனாகவும் இருக்கணும்.. அமைச்சர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
சென்னை: தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முதல்வராக பொறுப்பேற்ற நாள் அன்று கையெழுத்திட்ட 5 வாக்குறுதிகள் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும், பெண்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை என்னும் திட்டத்தை தி.மு.க தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. இந்த திட்டம் தொடர்பாக வருகிற தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.
தமிழ்நாட்டில் இந்த 5 மாவட்டங்களில்.. 2 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
தி.மு.க அரசு தாக்கல் செய்யவுள்ள முதல் பட்ஜெட் இது என்பதால் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து தனி கவனம் செலுத்தி வருகிறார்.
வேளாண்மை பட்ஜெட்
தமிழ்நாட்டில் இதுவரை பொதுவான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்த முறை வரலாற்றில் முதல் முறையாக விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழ்நாட்டின் முதல் வேளாண்மை பட்ஜெட் என்பதால் பொதுமக்கள் குறிப்பாக விவசாயிகள் இதனை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
மு.க.ஸ்டாலின்
இந்த நிலையில் இந்த ஆண்டு பொது பட்ஜெட்டும், வேளாண்மை துறைக்கான தனி பட்ஜெட்டும் விவசாயிகள் மற்றும் துறை வல்லுநர்கள், பல்வேறு சங்கப் பிரதிநிதிகளைக் கலந்தாலோசித்து மக்களுக்கும் பொருளாதாரத்துக்கும் பயன்தரத் தக்க வகையில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.
தேர்தல் வாக்குறுதி
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, தமிழ்நாடு அரசு இவ்வாண்டு இரண்டு நிதிநிலை அறிக்கைகளைச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளது. தமிழக அரசு வரலாற்றில் முதன்முறையாக வழக்கமான நிதிநிலை அறிக்கையோடு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பாகத் தனியே ஒரு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.
விவசாயம் செழிக்கணும்
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை நிதிநிலை அறிக்கையினை விவசாயிகள், விவசாய நிபுணர்கள் மற்றும் விவசாய சங்கங்கள் ஆகியோரைக் கலந்தாலோசித்து விவசாயம் செழிக்கவும் விவசாயிகள் அவர்களது உழைப்பிற்கேற்ற உரிய பயன்களைப் பெறும் வகையில் சிறந்த திட்டங்களை உள்ளடக்கித் தயாரிக்க வேண்டுமென்று முதல்வர், அமைச்சர்களையும் அரசு உயர் அலுவலர்களையும் அறிவுறுத்தினார்.
கருத்துக்கள் பெற வேண்டும்
மேலும், பொது நிதிநிலை அறிக்கையினைப் பொருளாதார மற்றும் நிதிநிலை வல்லுநர்கள், பெருந்தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள், தொழிலதிபர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புப் பிரதிநிதிகள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், மீனவர் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோரைக் கலந்தாலோசித்து அவர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டு மக்களின் வாழ்வில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையிலும் சிறந்த நிதிநிலை அறிக்கையினைத் தயாரிக்க அமைச்சர்களையும் அரசு உயர் அலுவலர்களையும் முதல்வர் அறிவுறுத்தினார். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.