மருத்துவ உபகரணங்கள் வாங்க உடனடியாக ரூ.3000 கோடி தேவை.. பிரதமரிடம், எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை
சென்னை: தமிழகத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக ரூ.3000 கோடி மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியுடனான ஆலோசனை கூட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், துணை நிலை ஆளுநர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று, கொரோனா தடுப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழகத்தில் அரசு எடுத்துள்ள நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் பற்றி பிரதமர் நரேந்திர மோடியிடம், எடப்பாடி பழனிச்சாமி விளக்கமாக தெரிவித்தார் மேலும் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு நிதி தேவை என்று அவர் வலியுறுத்தினார்.
கொரோனாவை விரட்ட.. மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்.. முதல்வர்களுடனான ஆலோசனையில் மோடி பேச்சு
உடனடி தேவை
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கூடுதலாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது பற்றி முதல்வர் அப்போது விளக்கமாக தெரிவித்தார். தமிழக அரசின் உடனடித் தேவைக்கு 2000 கோடி ரூபாய் தேவை என்று ஏற்கனவே நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம்.
மருத்துவ உபகரணம்
மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக உடனடியாக 3,000 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்க வேண்டும். தேசிய சுகாதார மிஷன் மூலமாக தமிழகத்துக்கு வர வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.
பொருளாதார மீட்புக்கு ரூ.9000 கோடி
பொருளாதார மீட்பு நடவடிக்கைக்காக 9,000 கோடி ஒதுக்க வேண்டும். ஜிஎஸ்டி நிலுவை தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும். ரிசர்வ் வங்கி மூலமாக வழங்கப்படக் கூடிய கடன் அளவை இரட்டிப்பாக்க வேண்டும், அதற்கு வட்டி வசூலிக்க கூடாது. தமிழக அரசு விலையில்லாமல், அரிசி பருப்பு உள்ளிட்ட பொருட்களை மக்களுக்கு வழங்கி வருகிறது.
கூடுதல் உணவு பொருள்
எனவே கூடுதலாக எங்கள் மாநிலத்திற்கு, உணவுப் பொருட்களை ஒதுக்க வேண்டும். இவ்வாறு அந்த கூட்டத்தின் போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தினார். மோடியுடனான, ஆலோசனைக் கூட்டத்தின்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடனிருந்தார்.