பட்டாசு கடை தீ விபத்து.. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் நிவாரணம்.. முதல்வர் அறிவிப்பு
கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் நிவாரணத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள சங்கராபுரம் பகுதியில் முருகன் என்பவரின் பட்டாசு கடை ஒன்று உள்ளது. தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மக்கள் அதிக ஆர்வத்துடன் பட்டாசுகளை வாங்கக் குவிந்திருந்தனர்.
இந்தச் சூழலில் இந்த பட்டாசு கடையில் இரவு நேரத்தில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டு, பட்டாசுகள் வெடித்துச் சிதறியன. தொடர்ந்து தீ மளமளவெனப் பரவ அருகிலிருந்த கடைகளிலும் தீ பற்றியது.
இந்த தீ விபத்தில் கடைகளில் இருந்த 5 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதில் படுகாயம் அடைந்தவர்கள் சங்கராபுரம், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த தீ விபத்து காரணமாக சங்கராபுரம் பகுதியே புகை மண்டலமாகக் காட்சி அளிக்கிறது. சம்பவம் பற்றி தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இதில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் நிவாரணத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரத்தில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக ஐவர் உயிரிழந்தனர் என அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சமும்; தீவிர சிகிச்சையில் இருப்போருக்கு தலா ரூ.1 லட்சமும் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.