'வென்று வா வீரர்களே..' யுவன் சங்கர் ராஜா இசையில்.. முதல்வர் வெளியிட்ட அட்டகாசமான ஒலிம்பிக் பாடல்
சென்னை: ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்றுள்ள வீரர், வீராங்கனைகளை உற்சாகப்படுத்தும் வகையில், யுவன் சங்கர் ராஜா இசையமைத்த "வென்று வா வீரர்களே" என்ற பாடலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
ஜப்பான் நாட்டில் கடந்த ஆண்டு நடக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா காரணமாக இந்த ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டன. ஜூன் 23ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்கிய ஒலிம்பிக் போட்டிகள், வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் 18 போட்டிகளில் இந்தியாவைச் சேர்ந்த 110க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 வீரர், வீராங்கனைகள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்லும் தமிழ்நாடு வீரர்களுக்கு ரூ 3 கோடி வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒலிம்பிக் வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில், "வென்று வா வீரர்களே" என்ற பாடலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா இசையமைத்துப் பாடியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் இந்த பாடலை வெளியிட்டார். அப்போது விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழ்நாடு.. தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும்- சுகாதாரத்துறை