முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சி... தமிழக சுகாதாரத்துறை மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
சென்னை: கொரோனா பாதிப்பு விவகாரத்தில், முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிப்பதை போல் சுகாதாரத்துறை நடந்து கொள்வதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொரோனா தொற்றை பொறுத்தவரை, மத்திய - மாநில அரசுகளின் தவறான அணுகுமுறைகளின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
ஒரே நாளில் கொரோனாவால் 12 பேர் மரணம்.. 11 சென்னையில் நடந்தது.. உயிரிழப்பின் ஷாக் பின்னணி
வேதனை தருகிறது
கொரோனாவினால் தேசிய அளவில் 3 சதவிகித இறப்பு நிகழும் நிலையில், தமிழகத்தில் இறப்பு விகிதம் 0.7 சதவிகிதம் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அடிக்கடி பத்திரிகையாளர் சந்திப்பில் கூறி மகிழ்ச்சி அடைவது மிகுந்த வேதனையை தருகிறது. ஆனால், மேலும் பலர் இறக்க வாய்ப்பு இருப்பதாகவும், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் கவலைப்படுவதாக தெரியவில்லை.
66 நாட்கள் கழித்தும்
இந்த நிமிடம் வரை, வைரஸின் தன்மை குறித்து மாநில அரசு அறியவில்லை. தமிழகத்தில் எத்தனை பேரை கொரோனா பாதித்திருக்கிறது என்பதை அறியாமல் அந்த நோயை ஒழிக்க முடியாது. இதை மூடி மறைப்பதற்காகத் தான் பொது ஊரடங்கை 66 நாட்கள் கழித்தும் மேலும் நீட்டிப்பதற்கான முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமானால், அதற்குரிய கட்டமைப்பு மருத்துவ வசதிகள் தமிழக அரசிடம் இல்லை.
கண்டனம்
இந்தியாவிலேயே தொற்று நோயால் பாதிக்கப்பட்ட முதன்மை மாநிலமாக இருக்கிற மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழகம் இருந்து வருகிறது. எண்ணிக்கை கூடுவதைப் பற்றி கவலைப்படாத சுகாதாரத்துறை அமைச்சர், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இறப்பு விகிதம் குறைந்திருக்கிறது என அடிக்கடி கூறி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
அவலநிலை
இத்தகைய செயல்களின் மூலமாக வேகமாக பரவி வரும் கொரோனாவை தமிழக அரசால் எதிர்கொள்ள முடியுமா என்கிற மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அச்சம், பதற்றத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய அவலநிலையில் இருப்பதை உணர்ந்து போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு செயல்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.