திருநாவுக்கரசர் டிஸ்மிஸ்… தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக கே.எஸ். அழகிரி நியமனம்
சென்னை:தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டிருப்பதுடன், 4 செயல் தலைவர்களையும் கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதிமுக, திமுகவுக்கு இணையாக தற்போது காங்கிரசும் களத்தில் குதித்துள்ளது. திமுகவுடன் இணைந்து அக்கட்சி வரஉள்ள லோக்சபா தேர்தலை சந்திக்கிறது.
தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்து வரும் திருநாவுக்கரசர் மாற்றப்படலாம் என்று கடந்த சில மாதங்களாகவே பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், திருநாவுக் கரசர் நீக்கப்பட்டு, தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ். அழகிரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.
செய்திக்குறிப்பில் அறிவிப்பு
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாங்குநேரி தொகுதியின் எம்.எல்.ஏ. வசந்தகுமார், ஜெயக்குமார், எம்.கே.விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோர் செயல் தலைவராக நியமனம் செய்யப் பட்டுள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீக்கம் ஏன்?
வரக்கூடிய லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள வசதியாகவே திருநாவுக்கரசர் நீக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய தலைவராகி நியமிக்கப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ளதாவது: தமிழகம், புதுச்சேரியில் வரும் லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் மதச் சார்பற்ற கட்சிகள் வெற்றி பெற பாடுபடுவேன்.
எப்போதும் பாடுபடுவேன் கருத்து
கட்சியில் இளைஞர்களைச் சேர்க்க செயல்தலைவர்களுடன் சேர்ந்து பாடு படுவேன். திருநாவுக்கரசுக்கான இடம் எப்போதும் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் என்று தெரிவித்தார்.
முன்னாள் எம்.பி. அழகிரி
லோக்சபா தேர்தல் நெருங்கும் வேளையில், தலைவராக இருந்த திருநாவுக்கரசர் மாற்றப்பட்டு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.எஸ்.அழகிரி, கடலூர் லோக்சபா தொகுதியின் உறுப்பினராக இருந்தவர். காங்கிரஸ் சார்பில் ஒரு முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஒரு முறையும் தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார்.