பாரத ஸ்டேட் வங்கிக்கு தமிழக காங்கிரஸ் எச்சரிக்கை..!
சென்னை: உயர்கல்வி கடன் திட்டத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டால் பாரத ஸ்டேட் வங்கிகள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த போது கொண்டுவரப்பட்ட உயர்கல்வி கடன் திட்டத்தை தொடர்ந்து செயபடுத்த மத்திய பாஜக ஆட்சி ஆர்வம் காட்டவில்லை என்றும், வங்கிகள் மாணவர்களுக்கு கல்விக்கடன் அளிப்பதற்கு பதிலாக அவர்களை அலைச்சலுக்கு ஆளாக்கி துண்பத்தை தருவதாக குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
தமிழக மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட கடன் தொகையில் ரூ.1875 கோடியை வாராக்கடன் எனக் குறிப்பிட்டு அதனை வசூலிக்கும் பொறுப்பை ரூ.847 கோடிக்கு ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஸ்டேட் பாங்க் விற்றுவிட்டதாக கூறியிருக்கிறார். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் தந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் பாரத ஸ்டேட் வங்கியில் கல்விக்கடன் பெற்ற மாணவர்கள், கடும் மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கு ஆளாவதாக வேதனை தெரிவித்துள்ளார். ஏழை எளிய மணவர்கள் உயர்கல்வி மூலம் உயர வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்ட கல்விக்கடன் அளிக்கும் திட்டம் இன்று மிகப்பெரிய சோதனைக்கு உள்ளகியிருப்பதாக கே.,எஸ்.அழகிரி கூறியிருக்கிறார்.
தனியார் நிறுவனம் மூலம் மாணவர்கள் மீது ஏவிவிடப்படும் அடக்குமுறையை பாரத ஸ்டேட் வங்கி நிறுத்திக்கொள்ளாவிட்டால், தமிழகம் முழுவதும் ஸ்டேட் பாங்க் முன்பு மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தம் என அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.