முதலமைச்சர் அறிவிப்பை வரவேற்ற காங்கிரஸ்... திமுகவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் கே.எஸ்.அழகிரி
சென்னை: டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்ததை வரவேற்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசு தொடர்ந்து தமிழர்களின் உரிமைகளை பறிக்கிற செயல்களில் ஈடுபட்டு வருவதாக அவர் சாடியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்.. மத்திய அரசுக்கு பொளேர் பதிலடி தந்த அதிமுக அரசு
அறிவிப்பு
ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களால் விவசாயம் பாதிக்கப்பட்டுவதை தடுக்க காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்திருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன். ஏற்கனவே, காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஓ.என்;.ஜி.சி. மற்றும் வேதாந்தா போன்ற தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய பா.ஜ.க. அரசு அனுமதி அளித்திருக்கிறது. தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கிற செயலாகும்.
கடமை முடிந்துவிடாது
மத்திய அரசின் அறிவிப்பின்படி, சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு செய்வது குறித்து அறிவிக்கையில் திருத்தம் கொண்டு வந்து மத்திய அரசு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்துகிற திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த முன்அனுமதியோ, பொதுமக்கள் கலந்தாய்வோ தேவையில்லை என்று அதில் கூறப்பட்டிருந்தது. அதை எதிர்த்து தமிழக முதலமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இதுபோன்ற தமிழகத்தை பாதிக்கின்ற மத்திய பா.ஜ.க. அரசின் முடிவுகளுக்கு எதிராக கடிதம் எழுதுவதோடு தமது கடமை முடிந்து விட்டதாக முதலமைச்சர் எடப்பாடி கருதுகிறார்.
மத்திய அரசுக்கு கேள்வி
தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இத்தகைய அறிவிப்பை வெளியிடுகிற துணிவை எப்படிப் பெற்றது ? மத்திய பா.ஜ.க. அரசோடு அனைத்து நிலைகளிலும் நெருக்கமான உறவை வைத்திருக்கிற அ.தி.மு.க. அரசு, இத்தகைய உதாசீனங்களுக்கு உட்படுவதற்கு என்ன காரணம் ? இத்தகைய தமிழக விரோதப் போக்கு காரணமாக மக்களிடையே எழுந்துள்ள கடும் சீற்றத்தை திசை திருப்புவதற்காகத் தான் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்கிற அறிவிப்பை வெளியிட வேண்டிய நிர்ப்பந்தம் தமிழக முதலமைச்சருக்கு ஏற்பட்டிருக்கிறது.
தொழில் கொள்கை
காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கிற அதே நேரத்தில், தமிழக அரசின் தொழிற் கொள்கை என்ன என்பது எவருக்கும் தெரியாத, அறிந்து கொள்ள முடியாத, புரியாத புதிராகவே உள்ளது. தமிழகத்தில் எந்த தொழிலை செய்யலாம், எந்தத் தொழிலை செய்யக் கூடாது என்பதில் தெளிவான பார்வையும் இல்லை, தெளிவான அனுகுமுறையும் இல்லை. பொதுவாக, தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.