ராகுலின் முடிவே இறுதி.. தமிழக காங்கிரஸ் தலைமையில் மாற்றம் வருமா? என்ன சொல்கிறது டெல்லி?
தமிழக காங்கிரஸ் தலைமையில் எந்த மாற்றமும் நடக்க வாய்ப்பில்லை என்று அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழக பொறுப்பாளர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைமையில் எந்த மாற்றமும் நடக்க வாய்ப்பில்லை என்று அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழக பொறுப்பாளர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் மீண்டும் உட்கட்சி பூசல் அதிகம் ஆகியுள்ளது. தங்கபாலு, இவிகேஎஸ் இளங்கோவன் என்று வரிசையாக பிரச்சனைகளை சந்தித்தது தமிழக காங்கிரஸ். தமிழக காங்கிரஸின் தலைவராக தற்போது திருநாவுக்கரசர் இருக்கிறார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் இவருக்கு எதிராகவும் அலை இருக்கிறது. இவர் விரைவில் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்படலாம் என்றும் தகவல்கள் வந்தது.
மாற்றம் குறித்த செய்திகள்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கும் திருநாவுக்கரசர் எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம் என்று ஒரு வாரம் முன் செய்திகள் வந்தது. காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு கூட இந்த செய்தியை உறுதிப்படுத்தி இருந்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதற்கான ஆலோசனையில் இருப்பதாகவும் செய்திகள் வந்தது.
யார் வருவதாக இருந்தது
மேலும் திருநாவுக்கரசருக்கு பதிலாக பீட்டர் அல்போன்ஸ் தலைவர் பொறுப்பை ஏற்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. காங்கிரஸ் திமுக கூட்டணி குறித்தும் திருநாவுக்கரசருக்கு பதிலாக பீட்டர் அல்போன்ஸ்தான் பேட்டி அளித்து வந்தார். தமிழக காங்கிரஸ் கட்சியில் திருநாவுக்கரசரை விட பீட்டர் அல்போன்ஸ் அதிகம் முன்னிறுத்தப்பட்டார்.
மாற்றம் கிடையாது
இந்த நிலையில் இப்போதைக்கு காங்கிரஸ் கட்சி தலைமையில் மாற்றம் இருக்காது என்று கூறுகிறார்கள். தமிழக காங்கிரஸ் தலைமையில் எந்த மாற்றமும் நடக்க வாய்ப்பில்லை என்று அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழக பொறுப்பாளர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைமைக்கு புதிய நபரை தேர்வு செய்ய வேண்டியதில்லை என்றும் கூறியுள்ளார்.
ராகுல் முடிவு
அதே சமயம், தலைவரை தேர்வு செய்வது, மாற்றுவது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தலைமையில் நடக்கும். இப்போது தமிழக காங்கிரஸ் கட்சியில் பூசல் இருப்பதாக வெளியாகும் செய்திகள் எல்லாமே தவறானது. கட்சியினர் எல்லோரும் ஒன்றாக ஒற்றுமையாகவே இருக்கிறார்கள் என்றும் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.