தமிழகத்தில் இன்று 477 பேருக்கு கொரோனா.. பலி எண்ணிக்கை 74ஆக உயர்வு.. ஒரே நாளில் 939 பேர் டிஸ்சார்ஜ்
சென்னை: தமிழகத்தில் இன்று, 477 பேருக்கு புதிதாக, கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னையில் மட்டும் 332 பேருக்கு இன்று பாதிப்பு பதிவாகியுள்ளது. தமிழகத்தில் மேலும் 3 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்ததால், 71 என்ற நிலையிலிருந்து 74 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 939 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். எனவே, மொத்தம், 3538 பேர் குணமடைந்துள்ளனர். இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
தயாராக இருங்கள்.. ஒரு பக்கம் கொரோனா.. இன்னொரு பக்கம் புயல்.. ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம்
வெளி மாநிலங்கள்
இன்று மாலை நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தைச் சேர்ந்த 384 பேருக்கும், பிற வெளிமாநிலங்களில் இருந்து வந்த 93 பேருக்கும் என மொத்தம் 477 பேருக்கு, பாதிப்பு பதிவாகியுள்ளது. அதில் மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்களுக்கு மட்டும் 81 பேருக்கு இன்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் இன்று சுமார் 20 சதவீதம் அளவுக்கு பாதிப்பு எண்ணிக்கை என்பது அதிகரித்துள்ளது.
குறைகிறது
மற்றபடி, தமிழகத்தில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்று விஜயபாஸ்கர் மேலும் தெரிவித்தார். அதேநேரம் நல்ல விஷயம் என்னவென்றால் மூன்றாவது நாளாக தமிழகத்தின் மொத்த வைரஸ் பாதிப்பு தொடர்ச்சியாக 500க்கும் கீழே குறைந்துள்ளது. மே 11ஆம் தேதி 798 என்ற அளவுக்கு தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக இருந்த நிலையில், படிப்படியாக அது குறைந்துள்ளது. சென்னையிலும் 11ம் தேதிதான் மிக அதிகமான பாதிப்பு பதிவாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
குணமடைவோர் விகிதம்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 939 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். கொரோனா, வைரஸ் பாதிப்பால் குணமடைந்து ஒரே நாளில் இத்தனை பேர் வீடு திரும்பியது இதுதான் முதல் முறையாகும். இதை சுட்டிக் காட்டிய விஜயபாஸ்கர், இந்தியா மட்டுமல்ல, உலக அளவிலும், தமிழகத்தில் இறப்பு விகிதம் என்பது குறைவாக இருக்கிறது. சிகிச்சை பெற்று குணமடைந்தார் விகிதமும் அதிகரித்து வருகிறது. இது நல்ல விஷயம் என்று தெரிவித்தார்.
மீட்பு விகிதம்
அதாவது தமிழகத்தில், 0.69 சதவீதம் என்ற அளவில், கொரோனா இறப்பு விகிதம் உள்ளது. மீட்பு விகிதம், 33.4 சதவீதம் என்ற அளவுக்கு உள்ளது. மேலும், ஈரோடு மாவட்டத்தில் கடந்த 31 நாட்களாக யாருக்கும் புதிதாக பாதிப்பு இல்லை. கோவை மாவட்டத்தில் 13 நாட்களுக்கு மேலாக, திருப்பூர் மாவட்டத்தில் 15 நாட்களுக்கு மேலாக, யாருக்கும் பாதிப்பு இல்லை.
சிறப்பு
சேலம், திருவாரூர் மாவட்டங்களில் தலா 10 நாட்கள், நாமக்கல், நீலகிரியில் தலா 7 நாட்கள், புதிதாக யாருக்கும் பாதிப்பு கண்டறியப்படவில்லை. இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று அளித்த பேட்டியின்போது தெரிவித்தார். மொத்த பாதிப்பில், 69.5% சென்னையில் மட்டுமே பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.