தமிழகத்தில் வேகமெடுத்த கொரோனா.. 1 லட்சத்தை தாண்டியது.. ஜஸ்ட் 16 நாளில் 50 ஆயிரம் பேருக்கு பாதிப்பு
சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த 16 நாட்களில் மட்டும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த மார்ச் 7ஆம் தேதி முதலாவது கொரோனா நோயாளி கண்டறியப்பட்டார். இதன்பிறகு, மெல்ல மெல்ல அதிகரித்துக்கொண்டிருந்தது.
இதனிடையே மார்ச் 24ம் தேதி முதல், நாடு முழுக்க கடுமையான ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது.
ஊரடங்கு உத்தரவு காரணமாகவும், மக்கள் ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு அதிகம் பயணிக்கவில்லை என்பதாலும், பரிசோதனைகள் அளவு அதிகம் இல்லை என்பதாலும், என பல்வேறு காரணங்களால் ஆரம்ப கட்டத்தில் வைரஸ் பாதிப்பு என்பது குறைவாக இருந்தது.
அதிர்ச்சி.. இன்று ஒரே நாளில் 4329 பேருக்கு கொரோனா.. 64 பேர் பலி.. மொத்த பாதிப்பு 102721ஐ தொட்டது!
16 நாட்கள்
உதாரணத்துக்கு, மார்ச் 7ம் தேதி முதல் ஜூன் 17ஆம் தேதி வரை, 103 நாட்களில், 50 ஆயிரத்து 193 பேர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், இன்று ஜூலை 3ம் தேதி, அதாவது அடுத்த 16 நாட்களில் மேலும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். முதல் 50,000 கேஸ்கள் பதிவாக 103 நாட்களான நிலையில், இரண்டாவது 50,000 கேஸ்கள் வருவதற்கு வெறும் 16 நாட்கள் மட்டுமே இருந்தது.
வேகமான பாதிப்பு
இதன் மூலம், வைரஸ் பரவல் வேகம் எவ்வளவு அதிகமாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இன்று, சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரத்து 721 என்ற அளவில் உள்ளது.
சமூக பரவல் இல்லை
இதில் சுமார் 42,955 இன்னமும் சிகிச்சை பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள். மற்றவர்கள் குணமடைந்து வீடு திரும்பியவர்கள், அல்லது பலியானவர்கள் என்ற பிரிவின் கீழ் வருகிறார்கள் என்கிறது அந்த புள்ளிவிபரம். சமூக பரவல் இல்லை என்று தொடர்ச்சியாக அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், கடைசி 50,000 பாதிப்பு 16 நாட்களில் ஏற்பட்டுள்ளது. சமூக பரவல் நிலை என்ற ஒரு அறிவிப்பு வெளியாகும்பட்சத்தில், சோதனைகள் இன்றி, அறிகுறிகள் இருந்தால் நேரடியாக கொரோனா வைரஸ் சிகிச்சை அளிக்க முடியும். இதுபோன்ற பல்வேறு வசதிகள் இருப்பதால் கொரோனா வேகத்தை கருத்தில் கொண்டு சமூக பரவல் ஏற்பட்டு உள்ளதா இல்லையா என்பதை பற்றியெல்லாம் அரசு ஆலோசிக்க வேண்டிய தேவை இருக்கிறது.
எம்ஜிஆர் பல்கலைக்கழகம் ஆய்வு
மேலும், எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் ஆய்வின்படி இப்போது வந்துள்ள இந்த அதிகரிப்பது குறைவுதான், அக்டோபர் மாதத்தில், தமிழகத்தில் உச்சபட்சமாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. வெறும் 16 நாட்களில் 50 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவதே, உச்ச நிலை இல்லை என்றால், அந்த உச்ச நிலையின்போது எந்த அளவுக்கு பாதிப்பு இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. எனவே பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் முக கவசம் அணிந்து, 6 அடி இடைவெளி விட்டு, சமூக இடைவெளியை பின்பற்றுவது காலத்தின் கட்டாயம்.