தமிழகத்தில் சிறார்கள் மத்தியில் வேகமெடுக்கும் கொரோனா.. இணை நோய் இல்லாதவர்களும் உயிரிழக்கும் சோகம்
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 12 வயதுக்கு உட்பட்ட 414 சிறார்கள் உட்பட 12,652 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் தமிழகத்தில் தினசரி வைரஸ் பாதிப்பு 10 ஆயிரத்தைக் கடந்தது.
தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இன்றைய தினசரி வைரஸ் பாதிப்பு 12 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதேபோல இணை நோய் இல்லாதவர்களுக்கு மத்தியிலும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.
480 மெட்ரிக் டன் ஆக்சிஜன்.. டெல்லிக்கு 'கணீர்'-னு போகணும்.. நீதிமன்றம் 'பொளேர்' உத்தரவு
சிறார்கள் மத்தியில் வேகம்
தமிழ்நாட்டில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டாம் அலையில், சிறார்கள் மத்தியில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி 12 வயதுக்கு உட்பட 128 சிறார்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 12 வயதுக்கு உட்பட்ட 414 சிறார்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் இன்று தினசரி கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 1,15,653 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் வெளிமாநிலங்களில் இருந்து திரும்பிய 36 பேர் உட்பட 12,652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 10,37,711 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
ஆக்டிவ் கேஸ்கள்
தமிழகத்தில் 84,361ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை தற்போது 90 ஆயிரத்தை நெருங்குகிறது. தற்போது மாநிலத்தில் 89,428 பேர் சிகிச்சை பெற்றுவருவதாக மாநில சுகாார துறை தெரிவித்துள்ளது. ஒரே நாளில் 7,526 கொரோனா நோயாளிகள் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா உயிரிழப்புகள்
தமிழகத்தில் கொரோனா உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தனியார் மருத்துவமனைகளில் 39 பேர், அரசு மருத்துவமனைகளில் 20 பேர் என மொத்தம் 59 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் பதிவான உயிரிழப்பு எண்ணிக்கை 13,317ஆக அதிகரித்துள்ளது. இன்று இணை நோய்கள் இல்லாத 8 பேரும் 50 வயதுக்குக் குறைவான 12 பேர் உயிரிழந்துள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மாவட்ட வாரியனா தகவல்
தலைநகர் சென்னையில் அதிகபட்சமாக 3789 பேருக்கு கோரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் ஒரே நாளில் 2572 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர், 24 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 906 பேருக்கும் கோவையில் 689 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் 510 பேருக்கும் மதுரையில் 495 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.