தமிழ்நாட்டில் மீண்டும் 2000ஐ நெருங்கும் கொரோனா.. 20 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு அதிகரிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 2000ஐ நெருங்கும் நிலையில், நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடுகையில் இன்று மட்டும் 20 தினசரி வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது.
கொரோனா பரவல் விகிதத்தைக் குறிக்கும் R Factor தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் அதிகமாக உள்ளதால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார் - 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு... தலைவர்கள் இரங்கல்
தமிழ்நாட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வரும் ஜூலை 9ஆம் தேதியுடன் முடியவுள்ள நிலையில், வைரஸ் பாதிப்பு சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆலோசனை இன்று நடத்தப்பட்டது.
தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாகக் குறைந்து வந்த வைரஸ் பாதிப்பு இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று தமிழ்நாட்டில் 1.58 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், மகாராஷ்டிராவில் இருந்து திரும்பிய 2 பேர் உட்பட மொத்தம் 1997 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இன்று வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 111 பேர் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தஞ்சை மாவட்டத்தில் தான் இன்றும் பாசிட்டிவ் விகிதம் அதிகமாக உள்ளது. இன்று அங்கு பாசிட்டிவ் விகிதம் 2.8% ஆக உள்ளது. அதேபோல அரியலூர் (2.6%) கோவை (2.0%), மயிலாடுதுறை (2.2%), புதுக்கோட்டை (2.2%) மாவட்டங்களில் பாசிட்டிவ் விகிதம் 2ஐ கடந்துள்ளது. இருப்பினும், இதர மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளதால் ஒட்டுமொத்த பாசிட்டிவ் விகிதம் 1.2% ஆகக் குறைந்துள்ளது.
கொரோனா உயிரிழப்புகள்
நேற்று மாநிலத்தில் 38 பேர் பலியாகியிருந்த நிலையில் இன்று கொரோனா உயிரிழப்புகள் 33ஆகச் சற்று குறைந்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 28 பேர் என மொத்தம் 33 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்தவர்களில் 6 பேர் 50 வயதுக்குக் குறைவானவர்கள் மற்றும் 9 பேர் எவ்வித இணை நோயும் இல்லாதவர்கள். ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டில் இதுவரை 34,230 கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆக்டிவ் கேஸ்கள்
அதேநேரம் ஆக்டிவ் கேஸ்கள் மாநிலத்தில் தொடர்ந்து குறைந்தே வருகிறது. கொரோனாவுக்கு தற்போதைய நிலவரப்படி மாநிலத்தில் இன்று 20138 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இன்று மட்டும் மாநிலத்தில் 1,943 கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக இதுவரை 25,15,030 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
மாவட்ட ரீதியாக வைரஸ் பாதிப்பு
மாவட்ட ரீதியான பாதிப்புகளை பொறுத்த வரையிலும் கோவையில் தான் தினசரி வைரஸ் அதிகமாக உள்ளது. இன்று கோவையில் 220 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல தலைநகர் சென்னையில் இன்று 196 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஈரோடு (161), செங்கல்பட்டு (130), தஞ்சை (119) , திருவள்ளூர் (106) ஆகிய மாவட்டங்களில் மட்டும் வைரஸ் பாதிப்பு 100ஐ கடந்துள்ளது.
13 மாவட்டங்களில் உயரும் கொரோனா
நேற்றைய வைரஸ் பாதிப்புடன் ஒப்பிடுகையில் சென்னை, கோவை உட்பட 20 மாவட்டங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கொரோனா உயிரிழப்புகளைப் பொறுத்தவரை அதிகபட்சமாகத் திருப்பூரில் 5 பேரும், சென்னை மற்றும் சேலத்தில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் தூத்துக்குடி, வேலூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இன்று உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.