ஷாக்..! மாநிலத்தில் மீண்டும் அதிகரிக்கும் ஆக்டிவ் கேஸ்கள்.. 4 மாவட்டங்களில் 100ஐ கடந்த பாதிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று 2ஆவது நாளாகக் குறைந்துள்ளது. இன்று மாநிலத்தில் மொத்தம் 1653 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை உச்சம் தொட்டது. அப்போது தினசரி வைரஸ் பாதிப்பு 30 ஆயிரத்தைத் தாண்டியது. இதையடுத்து மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
முதலில் அமல்படுத்தப்பட்ட தளர்வுகளற்ற ஊரடங்கால் வைரஸ் பாதிப்பு விரைவாகக் கட்டுக்குள் வந்தது. இதையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பல முறை நீட்டிக்கப்பட்டது.
சென்னை ஷாக்! 5 வயது சிறுவனுக்கு சூடு வைத்து, தலையை சுவற்றில் அடித்துக் கொலை செய்த அக்கா
தினசரி கொரோனா பாதிப்பு
கூடுதல் தளர்வுகள் காரணமாக எங்கு வைரஸ் பாதிப்பு அதிகரிக்குமோ என அஞ்சப்பட்டது. இருப்பினும், கொரோனா பாதிப்பு பெரியளவில் அதிகரிக்கவில்லை. கடந்த செப். 13ஆம் தேதி தொடங்கி 4 நாட்கள் வைரஸ் பாதிப்பு அதிகரித்த நிலையில், மீண்டும் கடந்த 2 நாட்களாக கொரோனா குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,56,175 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் மகாராஷ்டிராவில் இருந்து திரும்பிய ஒருவர் உட்பட மொத்தம் 1653 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 90 பேர் 12 வயதுக்கு உட்படச் சிறார்கள் ஆகும். இதுவரை தமிழ்நாட்டில் மொத்தம் 26,43,683 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல மாநிலத்தின் கொரோனா பாசிட்டிவ் விகிதமும் 1.1 ஆக உள்ளது. தலைநகர் சென்னையில் மாநில சராசரியைவிடக் குறைவாக 0.9%ஆக பாசிட்டிவ் விகிதம் உள்ளது.
கொரோனா உயிரிழப்புகள்
கொரோனா உயிரிழப்புகளைப் பொறுத்தவரை இன்று சிகிச்சை பெற்று வந்தவர்களில் மொத்தம் 22 உயிரிழந்துள்ளனர். அவர்களில் 19 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 3 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள். இன்று உயிரிழந்தவர்களில் ஒருவர் எவ்வித இணை நோயும் இல்லாத 2 பேரும் 50 வயதுக்குக் குறைவான ஒருவரும் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாகக் கோவையில் 5 பேரும் தஞ்சையில் நான்கு பேரும் பலியாகியுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 35,310 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.
ஆக்டிவ் கேஸ்கள்
தினசரி கொரோனா பாதிப்பு குறைந்த போதிலும் ஆக்டிவ் கேஸ்கள் சற்று அதிகரித்துள்ளது. நேற்று ஆக்டிவ் கேஸ்கள் 16,843ஆக இருந்த நிலையில், இன்று அது 16,893ஆக அதிகரித்துள்ளது. மேலும், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 1,581 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர், இதுவரை தமிழ்நாட்டில் 25,91,480 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக பாதிப்பு
மாவட்ட வரியான பாதிப்பில் இன்று சென்னையில் தான் அதிகமாக உள்ளது. தலைநகர் சென்னையில் இன்று மொத்தம் 204 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல கோவையில் 201 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டில் 101 பேருக்கும், ஈரோட்டில் 139 பேருக்கும் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த 4 மாவட்டங்களில் மட்டுமே இன்று வைரஸ் பாதிப்பு 100ஐ கடந்துள்ளது.