தமிழ்நாட்டில் 23ஆவது நாளாக குறையும் தினசரி பாதிப்பு... இன்று 14,016 பேருக்கு கொரோனா உறுதி
சென்னை: தமிழ்நாட்டில் தொடர்ந்து 23 நாளாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இன்று மாநிலத்தில் 14,016 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. அப்போது தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரம் வரை சென்றது. மாநிலத்தில் நிலைமையைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
ஊரடங்கிற்குப் பின்னரே மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதையடுத்து வரும் ஜூன் 21ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மாநிலத்தில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் 23ஆவது நாளாக இன்றும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 1,77,295 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய ஒருவர், வெளிமாநிலத்தில் இருந்து திரும்பிய ஒருவர் உட்பட மொத்தம் 14,016 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வரை 23,53,721 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா உயிரிழப்புகள்
அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் சிகிச்சை பலனிற்றி 267 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 187 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 80 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆகும். தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக தற்போது வரை 29,547 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.
ஆக்டிவ் கேஸ்கள்
மேலும், மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் மாநிலத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1.50 லட்சத்திற்கும் கீழாகக் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 1,49,927 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25,895 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக இதுவரை மாநிலத்தில் 21,74,247 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக பாதிப்பு
தலைநகர் சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 2ஆவது நாளாக ஆயிரத்திற்கும் கீழாக உள்ளது. சென்னையில் 935 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 27 பேர் தலைநகரில் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாகக் கோவையில் 1895 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு 19 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல ஈரோட்டில் 1323 பேருக்கும் சேலத்தில் 855 பேருக்கும் திருப்பூரில் 820 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.