தமிழ்நாட்டில் 11,000 கீழ் சென்ற தினசரி பாதிப்பு.. இந்த 2 மாவட்டங்களில் மட்டுமே நிலைமை இன்னும் மோசம்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 10,448 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 270 பேர் கொரோாவால் உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டில் கடந்த மாதம் உச்சத்திலிருந்து கொரோனா பாதிப்பு, ஊரடங்கிற்குப் பிறகு மெல்லக் குறைந்து வருகிறது. தலைநகர் சென்னை உட்படப் பல மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.
இணையதள சேவையை முடக்குவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.. ஜி 7 நாடுகள், இந்தியா வெளியிட்ட கூட்டறிக்கை
ஒருகட்டத்தில் 35 ஆயிரத்தைத் தாண்டிய தினசரி வைரஸ் பாதிப்பு தற்போது 11 ஆயிரத்திற்கும் கீழாகக் குறைந்துள்ளது. அதேபோல ஆக்டிவ் கேஸ்களும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் தொடர்ந்து 26ஆவது நாளாக இன்றும் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. மாநிலத்தில் இன்று 1,71,085 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் வெளி மாநிலங்களிலிருந்து திரும்பிய இருவர் உட்பட 10,448 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் 23,88,746 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா உயிரிழப்புகள்
மேலும், மாநிலத்தில் இன்று சிகிச்சை பலனின்றி 270 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 164 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 106 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆகும். ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டில் இதுவரை 30,338 பேரை நாம் கொரோனா என்ற கொடிய நோய்க்கு இழந்துள்ளோம். மாவட்ட வாரியாக பார்க்கும் போது சென்னையில் அதிகபட்சமக 42 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். அதேபோல கோவையில் 28 பேரும் திருபத்தூரில் 20 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
ஆக்டிவ் கேஸ்கள்
அதேநேரம் மாநிலத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று 1.25 லட்சமாக இருந்த ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை இன்று 1.14 லட்சமாகக் குறைந்துள்ளது. ஆக்டிவ் கேஸ்கள் குறைவது சுகாதார துறையின் அழுத்தத்தைக் குறைக்கும். மேலும், இன்று ஒரே நாளில் மட்டும் 21,058 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது வரை 22,44,073 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
மாவட்ட ரீதியாக பாதிப்பு
தமிழ்நாட்டில் இன்றும் அதிகபட்சமாகக் கோவையில் தான் 1420 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஈரோட்டில் இன்று 1123 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் சென்னையில் ஆயிரத்திற்கும் கீழாகவே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இன்று சென்னையில் 689 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 100க்கும் கீழாகக் குறைந்துள்ளது.