இப்படி வரி வசூல் பண்ணுனா நிதி எப்படி சரியாகும்? அதிர்ச்சி தந்த ஆர்டிஐ- தமிழ்நாடு அரசு சுதாரிக்கணும்
சென்னை; தமிழ்நாட்டில் உள்ள 15 மாநகராட்சிகளில் 13 மாநகராட்சிகளில் கடைசி மூன்று ஆண்டுகளாக முறையாக வரி வசூல் செய்யப்படவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் மூலம் இந்த விவரம் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மோசமான நிதி நிலையில் இருந்து மீண்டு கொண்டு இருக்கிறது. புதிய முதலீடுகள் சிலவற்றால் நிதி நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக சரியாகிக்கொண்டு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நிதி நிலவரம் குறித்து நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன் வெள்ளை அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
1 முதல் 8ஆம் வகுப்பு வரை.. பள்ளிகள் முழுமையாக திறப்பது எப்போது?.. அன்பில் மகேஷ் கூறிய தகவல்
தமிழ்நாட்டின் மொத்த கடன் 2021 - 22ம் ஆண்டின் படி ரூ.5,70,189 கோடியாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டின் பொதுக்கடன் மட்டும் 26.69 சதவிகிதமாக உள்ளது என்று அவர் குற்றஞ்சாட்டி இருந்தார். கடந்த 10 வருடங்களில் தமிழ்நாடு எவ்வளவு பொருளாதார சரிவை சந்தித்துள்ளது என்று அவர் இதில் விளக்கி இருந்தார்.
சுமை
தமிழ்நாட்டில் கடன் சுமை குறித்தும் வருவாய் இழப்பு குறித்தும் விரிவாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இதில் விளக்கி இருந்தார். இதில் ஜிஎஸ்டி காரணமாக ஏற்பட்ட வருவாய் இழப்பு குறித்தும் பிடிஆர் விளக்கி இருந்தார். ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை என்பதையும் வருவாய் இழப்பிற்கான காரணமாக குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் தமிழ்நாட்டிலேயே முறையாக வரி வசூல் செய்யப்படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கடன்
ஆம் தமிழ்நாட்டில் மாநகராட்சியில் வசூல் செய்யப்பட வேண்டிய வரிகள் கடந்த 2018ல் இருந்து முறையாக வசூல் செய்யப்படவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்ட கேள்வி மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எம். காசிமாயன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி எழுப்பி இந்த தகவலை வெளியிட்டு இருக்கிறார். அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 15 மாநகராட்சிகளில் 13 மாநகராட்சிகளில் கடைசி மூன்று ஆண்டுகளில் வரி வசூல் செய்யப்பட வேண்டிய வரித்தொகை முறையாக வசூல் செய்யப்படவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வரி வசூல்
2018-2019, 2019-2020, 2020-2021 ஆண்டுகளில் முறையாக வரி வசூல் செய்யப்படாத காரணத்தால் பெரிய அளவில் நிலுவை தொகை உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்டிஐ மனு முதலில் நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது மேல்முறையீட்டில் விவரங்கள் எல்லாம் வெளியாகி இருக்கிறது.
7 விதமான வரிகளை முறையாக வசூல் செய்யாமல் அரசு இருந்தது இதில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை & கோயம்புத்தூர் தவிர்த்து மற்ற 13 மாநகராட்சிகளில் வரி வசூல் செய்ய வேண்டிய மொத்த தொகை ரூபாய் 5855 கோடி ஆகும். ஆனால் வசூல் செய்யப்பட்ட தொகை ரூபாய் 2333 கோடி மட்டுமே என்று இந்த தகவல் அறியும் உரிமை சட்ட தகவல் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. வசூல் செய்யப்படாமல் நிலுவையில் உள்ள தொகை ரூபாய் 3522 கோடி ஆகும் .
7 விதமான வரி
இந்த தொகை தற்போது கிடைத்தால் தமிழ்நாடு அரசுக்கு மிகப்பெரிய உதவியாக அது இருக்கும். அதேபோல் இனி வரும் நாட்களிலும் முறையாக வரி வசூல் செய்யும் பட்சத்தில் அது மிகப்பெரிய வருவாயாக அரசுக்கு இருக்கும். தமிழ்நாடு அரசு இப்போதே சுதாரித்துக்கொண்டால் வருமானத்தை பெருக்க முடியும். தமிழ்நாட்டில் இந்த 13 மாநகராட்சியில் மொத்தம் வரி வசூல் சதவிகிதம் 40% மட்டுமே செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள 60 சதவிகிதம் இன்னும் நிலுவையில் உள்ளது.
என்னென்ன வரி
வசூல் செய்யப்படாத வரி விவரங்கள் பின் வருமாறு, கடைசி மூன்று ஆண்டுகளில் 13 மாநகராட்சிகளில், வசூல் செய்ய வேண்டிய சொத்து வரி தொகை மொத்தம் ரூபாய்.2759/- கோடி ஆகும். வசூல் செய்யப்பட்ட தொகை மொத்தம் ரூபாய்.1207/-கோடி மட்டுமே, வசூல் செய்யபடாமல் உள்ள தொகை மொத்தம் ரூபாய்.1552/- கோடி ஆகும். தண்ணீர் வரி கடைசி மூன்று ஆண்டுகளில் 13 மாநகராட்சிகளில், வரி வசூல் செய்ய வேண்டிய தொகை மொத்தம் ரூபாய்.802/- கோடி. வசூல் செய்யப்பட்ட தொகை *ரூபாய்.372/-கோடி மட்டுமே, வசூல் செய்யப்படாமல் உள்ள தொகை மொத்தம் ரூபாய்.430/- கோடி.
நில வரி
நான் - வரி, கடைசி மூன்று ஆண்டுகளில் 13 மாநகராட்சிகளில், வரி வசூல் செய்ய வேண்டிய தொகை மொத்தம் ரூபாய்.909/- கோடி ஆகும். வசூல் செய்யப்பட்ட தொகை மொத்தம் ரூபாய்.230/-கோடி மட்டுமே.வசூல் செய்யபடாமல் உள்ள தொகை மொத்தம் ரூபாய்.679/- கோடி.வெற்று இடத்திற்கான நில வரி கடைசி மூன்று ஆண்டுகளில், வசூல் செய்ய வேண்டிய தொகை மொத்தம் ரூபாய்.345/- கோடி. வசூல் செய்யப்பட்ட தொகை மொத்தம் ரூபாய்.74/-கோடி மட்டுமே,.வசூல் செய்யபடாமல் உள்ள தொகை மொத்தம் ரூபாய்.271/- கோடி.
கழுவுநீர் கால்வாய் வரி
எஸ்யுசி வரி கடைசி மூன்று ஆண்டுகளில் வசூல் செய்ய வேண்டிய தொகை மொத்தம் ரூபாய்.229/- கோடி. வசூல் செய்யப்பட்ட தொகை மொத்தம் ரூபாய்.137/-கோடி மட்டுமே, வசூல் செய்யப்படாமல் உள்ள தொகை ரூபாய்.92/- கோடி.
கழுவுநீர் கால்வாய் வரி கடைசி 3 ஆண்டுகளில் வசூல் செய்ய வேண்டிய தொகை ரூபாய்.382/- கோடி. வசூல் செய்யப்பட்ட தொகை *ரூபாய்.86/-கோடி மட்டுமே. வசூல் செய்யப்படாமல் உள்ள தொகை ரூபாய்.296/- கோடி.தொழில்முறை வரி கடைசி மூன்று ஆண்டுகளில் வசூல் செய்ய வேண்டிய தொகை மொத்தம் ரூபாய்.425/- கோடி. வசூல் செய்யப்பட்ட தொகை ரூபாய்.226/-கோடி மட்டுமே. வசூல் செய்யபடாமல் உள்ள தொகை மொத்தம் ரூபாய்.199/- கோடி .