ஒரே நாளில் 5 மடங்கு.. யோசிக்க முடியாத அதிகரிப்பு! அதிர்ச்சியில் அரியலூர், கவலையளிக்கும் காஞ்சிபுரம்
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. வழக்கம் போல இந்த பட்டியலில் சென்னை முதலிடம் பிடித்து உள்ளது. அங்கு 324 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2328 ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video
ஆனால் மாவட்ட வாரியான பட்டியலில் இன்று மிகப்பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. அந்த அதிர்ச்சியை அளித்தது அரியலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள்.
தமிழகத்தின் மிகச்சிறிய ஒரு மாவட்டம் அரியலூர் என்பது நாம் அறிந்ததே. அங்குதான் இன்று ஒரே நாளில் 188 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதல் முறையாக இவ்வளவு பெரிய பாதிப்பு.. இன்று 771 பேருக்கு கொரோனா! பலி எண்ணிக்கை 35
அதிர்ச்சியளிக்கும் அரியலூர்
சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை இந்த மாவட்டம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்றுவரை இந்த மாவட்டத்தில் மொத்தமே 34 பேர்தான் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், இன்று இதுவரையிலான மொத்த பாதிப்பைவிடவும் 5 மடங்குக்கு மேல் அரியலூரில் பாதிப்பு பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக அதிகம் பாதித்த மாவட்டம் கடலூர். 95 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் முறையே அரியலூர் மற்றும் கடலூர் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை என்பது 222 மற்றும் 324 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.
காஞ்சிபுரத்தில் இதுவரை இல்லாத அளவு அதிகரிப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 45 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுநாள் வரை மொத்தமே, 42 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு பதிவாகியிருந்த மாவட்டம் காஞ்சிபுரம். ஆனால், இன்று ஒரே நாளின் பாதிப்பு, இதுவரையிலான மொத்த பாதிப்பையும் தாண்டி விட்டது. எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில், மொத்தம், 87 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் கோயம்பேடு மார்க்கெட்டுடன் தொடர்பு கொண்டவர்கள் என்பது தான் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
மதுரை, திருவள்ளூர்
மதுரையை பொருத்த அளவில், இன்று 20 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தின் மொத்த எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 34 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் 129 என்ற எண்ணிக்கையில் அது அதிகரித்துள்ளது. திருவண்ணாமலையில் 17 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42.
|
பாதிப்பில்லா மாவட்டங்கள்
விருதுநகர், திருப்பூர், சிவகங்கை, ராணிப்பேட்டை, ராமநாதபுரம், நீலகிரி, நாமக்கல், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, தருமபுரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று புதிதாக பாதிப்பு பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.