தமிழக டாக்டர்களுக்கு அரசு கொடுத்துள்ளது பாதுகாப்பு உபகரணமே கிடையாது.. ஹைகோர்ட்டில் காரசார வழக்கு
சென்னை: மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக தினந்தோறும் 15 ஆயிரம் பிபிஇ முழுகவச உடைகள் அனுப்பி வைக்கப்படுவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அந்த உடைகள் அனைத்துமே சாதாரணமானவை என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், தொற்று பாதித்தவர்களுக்கு சி்கிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அத்தியாவசியப் பணியில் உள்ள காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முழு உடல் கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், அனிதாசுமந்த் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுகாதார துறை கூடுதல் செயலாளர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், கொரொனோ தொற்று தடுப்பு பணியில் முதன்மை நிலையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஆய்வக பணியாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள் தங்களை தற்காத்து கொள்ளவதற்கு ஏற்பாடுகளையும், பிபிஇ முழு கவச உடையை அணிவது, அதை பயன்படுத்திய பின் பாதுகாப்பாக அகற்றுவது குறித்தும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பணிகளில் ஈடுப்பட்டுள்ளவர்களுக்கு கைகளை சுத்தமாக வைப்பதற்கு தேவையான கிருமி நாசினி, சோப் போன்றவை பற்றாக்குறை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் தினந்தோறும் 15 ஆயிரம் பிபிஇ முழுகவச உடைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.மருத்துவ பணியில் ஈடுப்பட்டுள்ள அனைவருக்கும் ஷிப்ட் அடிப்படையில் 6 மணி நேரம் மட்டுமே பணி வழங்கப்பட்டு வருகிறது.
இதே போல் தமிழக காவல்துறையினர் 7 ஆயிரத்து 850 பேருக்கு முக கவசம், கையுறை வழங்குவதற்கு 50 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கொரொனோ வார்ட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருக்கும் காவலர்கள் முழு கவச உடை மற்றும் என் 95 முககவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது
இதே போல், கொரொனோவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் துப்புரவு பணிபுரியும் பணியாளர்களுக்கு உயர்தர கையுறை, மற்றும் ஷூக்கள் மற்றும் முழு கவச உடைகள் வழங்க சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலளிக்கும்விதமாக மனுதாரர், மறுப்பு அறிக்கையில், மருத்துவர்களுக்கு WHO குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்படி மூன்றடுக்கு பாதுகாப்பு ஆடை கொடுக்கப்படவில்லை மொத்தத்தில் அரசு மருத்துவர்களுக்கு கொடுக்கப்பட்டது PPE Kit - டே கிடையாது அது வெறும் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மேலுடைதான் (Surgical Apron) என்று குறிப்பிட்டுள்ளனர்.
தடுப்பூசி தேவையில்லை.. கொரோனா பரவாமல் தடுக்க மருந்து இருக்கிறது.. சீன ஆய்வகம் அறிவிப்பு
தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில் இதுகுறித்த சரியான தகவல்கள் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கில்,வாதம் செய்ய அரசு தரப்பு வழக்கறிஞர் ஒருவாரம் அவகாசம் கோரியதன் அடிப்படையில் நீதிபதிகள் சத்தியநாராயனன் மற்றும் அனிதா சுமந்த் ஆகியோரின் அமர்வு வழக்கை ஒருவாரம் கழித்து பட்டியலிடும் படி உத்தரவிட்டுள்ளனர்.