தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? மருத்துவ குழுவுடன் முதல்வர் ஆலோசனை.. விரைவில் முக்கிய அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதா இல்லையா என்பது குறித்து மருத்துவர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை நடத்தினார். விரைவில் இதில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.
Recommended Video
தமிழகம் உட்பட நாடு முழுக்க, நான்காம் கட்ட ஊரடங்கு மே 31-ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. இதன் பிறகும் தமிழகத்தில் ஊரடங்கை நீடிப்பதா, கைவிடுவதா என்பது தொடர்பாக அரசு தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு இது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் கூட, தமிழகத்தில் மருத்துவ நிபுணர் குழு, மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை செய்துவிட்டுதான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஊரடங்கு விதிகள் தொடர்பான முடிவுகளை எடுக்கிறார்.
கடந்த முறையும் இதுபோல ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுள்ளார். மொத்தம் 3 முறை மருத்துவ குழு பரிந்துரையின்பேரில்தான், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
அதே போலத்தான் இன்றும் அரசால் நியமிக்கப்பட்ட 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழு உடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
அந்த கூட்டத்தில், ஊரடங்கு உத்தரவை நீட்டித்து, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது, அல்லது மேலும் தளர்வு வழங்குவது என்பது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. மருத்துவர் குழு எந்த மாதிரியான பரிந்துரைகளை வழங்க உள்ளது என்பது தொடர்பாக பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.