பசங்களா நல்லா படிங்க!.. இனி நோ கார்ட்டூன், நோ சீரியல்.. 26 முதல் கல்வி சேனல் தொடக்கம்
சென்னை: பள்ளி மாணவர்களுக்கான கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பை வரும் 26-ஆம் தேதி முதல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்.
பள்ளி மாணவர்களுக்கு கல்வி சார்ந்த செய்திகளை தொலைக்காட்சி மூலம் கொண்டு செல்வதற்கான முயற்சியாக 24 மணி நேர கல்வி சேனல் ஒன்று தமிழக பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் தொடங்கப்படவுள்ளது.
இதன் மாதிரி ஒளிபரப்பு தற்போது தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் வரும் 26-ஆம் தேதி முதல் இந்த கல்வி சேனல் முழு பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 9-ஆவது மாடியில் இதற்கான கட்டுப்பாட்டு அறை, படப்பிடிப்பு அரங்குகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சேனல் இங்கிருந்தே ஒளிபரப்பப்படுகிறது.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் பதவியேற்ற இரு ஆண்டுகளில் பாடத் திட்டங்கள் மாற்றம், தேர்வு முறைகளில் மாற்றம், நீட் தேர்வு பயிற்சி, சீருடைகள் மாற்றம் என பல்வேறு அதிரடிகளை புகுத்தி வருகிறார்.
அந்த வகையில் இந்த கல்வி சேனலும் கல்வித் துறைக்கு செங்கோட்டையனின் சீரிய சேவையை போற்றும்படியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.