அமைதியாக அசத்தும் அமமுக.. அசராத அதிமுக.. விரட்டும் திமுக.. உள்ளாட்சி தேர்தலில் கலக்குவது யார்?
சென்னை: தமிழகத்தில் வெளியாகி வரும் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வைத்து பார்க்கும்போது, எந்த கட்சி ஆதிக்கம் செலுத்துகிறது..? அடுத்து எந்த மாதிரி அரசியல் களம் மாறக் கூடும் என்பது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் உலா வருவதை பார்க்க முடிகிறது.
அதோ.. இதோ என்று இழுத்தடித்து ஒருவழியாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் நடந்துள்ளன. அதிலும், நகர்ப்புறங்கள் தேர்தலுக்கு நடைபெறவில்லை. எம்ஜிஆர் காலம் தொட்டே நகர்ப்புறங்கள் திமுகவுக்கும், கிராமப்புறங்கள் அதிமுகவுக்கும் பலமான பகுதிகள் என்ற ஒரு கணிப்பு உள்ளது. பல்வேறு தேர்தல் முடிவுகளும் அப்படித்தான் நமக்கு தகவல் அளிக்கின்றன.
அந்த வகையில் இப்போது நடைபெற்ற தேர்தல் என்பது, அதிமுக பலமாக இருப்பதாக கூறப்படும் ஊரகப் பகுதிகளில் மட்டும்தான். அதுவும் கூட இன்னமும் தேர்தல் முடிவுகள் என்பது முழுமையாக வரவில்லை. பாதிக்குப் பாதி பகுதிகளிலிருந்து கூட இன்று நள்ளிரவு வரை முழு தகவல் வரவில்லை.
உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் திட்டமிட்ட தாமதம்- ஹைகோர்ட்டில் திமுக முறையீடு
முன்னிலை
வெள்ளிக்கிழமை அதிகாலை 12.30 மணி நிலவரப்படி, மொத்தம் உள்ள 515 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களில், அதிமுக கூட்டணி 200, திமுக கூட்டணி 197 தொகுதிகளில் முன்னிலை அல்லது வெற்றி பெற்றிருந்தது.அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இரண்டு தொகுதிகளில் முன்னிலை வகித்தது. 5067 ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களில், திமுக கூட்டணி 1367, அதிமுக 1198 பதவியிடங்களில் முன்னிலை அல்லது வெற்றி பெற்றிருந்தது. அமமுக 50 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. நாம் தமிழர் 1 இடத்தில் வெற்றி பெற்றது.
அமமுக எழுச்சி
கடந்த லோக்சபா தேர்தலின் போது அதிமுக வாக்குகளை பிரித்து அதன் பின்னடைவுக்கு காரணமாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கணிக்கப்பட்டது அமமுக. ஆனால், போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் மோசமான வாக்குகளைத்தான் பெற்றது. ஆனால் இப்போது ஆச்சரியம். உள்ளாட்சி தேர்தலில் அது பழையபடி உயிர்ப்புடன் எழுந்துள்ளது. பெரிய கட்சிகளை தாண்டி, பிற கட்சிகள் என்ற வகையில், கட்சி ஆரம்பித்து வருடங்கள் கடந்த, நாம் தமிழர் கட்சியே, 1 இடத்தில் மட்டும் வென்றுள்ள நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சத்தமே இல்லாமல் சாதித்துக் கொண்டிருக்கிறது.
அதிமுக தீவிரம்
இதன் மற்றொரு அர்த்தம் என்னவென்றால்.. அதிமுகவின் வாக்குகள் கணிசமாக அமமுகவால் பிரிக்கப்பட்டுள்ளது. என்பதுதான்,. ஒருவேளை அது நடைபெறாமல் இருந்திருந்தால், அதிமுக இன்னும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க முடியும். சொல்லப்போனால் திமுகவை விட அதிக தொகுதிகளில் முன்னிலை பெறவும் வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் இந்த தேர்தல் திமுகவுக்கு பெரும் வெற்றி என்றோ, அதிமுகவுக்கு பெரும் தோல்வி என்று கணித்து விட முடியாது.
நாமக்கலில் திருச்செங்கோடு ஒன்றியத்தில் முதல் கவுன்சிலரானார் திருநங்கை ரியா
இரு கட்சிகளும் சொல்வது என்ன?
ஆட்சியில் அதிமுக இருப்பதால் அந்த கட்சிக்கு ஆதாயம் என்று திமுக கூறினாலும் கூட, தொடர்ந்து எட்டு வருடங்களுக்கு மேலாக ஆட்சியில் இருக்கக்கூடிய ஒரு கட்சிக்கு இந்தளவு வாக்குகள் கிடைத்துள்ளது பெரிய விஷயம்தான் என்பது அதிமுக தரப்பு வாதமாக உள்ளது. அதுவும்கூட, "எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமைமிக்க ஒற்றை தலைமைகளை கண்டு வந்த அதிமுக, இப்போது இரட்டை தலைமையின் கீழ் தேர்தலை சந்தித்தும் கூட இதை சாதித்துள்ளது. இதில் அமமுக வேறு கணிசமாக வாக்குகளைப் பிரித்துள்ளது. அப்படியும் அதிமுகவுக்கு இந்த அளவுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர் என்றால் கிராமப்புறங்களில் அதிமுக செல்வாக்கு அப்படியே இருக்கிறது" என்கிறார் ஒரு நிர்வாகி.
அடுத்து நகர்ப்புற தேர்தல்
இந்த தேர்தலில் பெற்றிருக்கக்கூடிய முன்னிலையை அடிப்படையை வைத்து பார்க்கும்போது, விரைவிலேயே நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்த அதிமுக விரும்பலாம் என்றே தெரிகிறது. அதேநேரம் இது மிக குறைந்த பகுதிகளுக்கான நிலவரம்தான். இன்னும் பெரும்பாலான இடங்களுக்கு முன்னிலை நிலவரம் வெளியாக ஆரம்பிக்கும் போதுதான், ஒரு சரியான பார்வை முன்வைக்க முடியும். இப்போதுள்ள கூட்டணிகள் மாறுமா, அப்படியே தொடருமா என்பதெல்லாம் முழுமையாக தேர்தல் முடிவுகள் வெளியான பிறகுதான், விடை கிடைக்கும்.