சென்னை உட்பட 6 மாவட்ட மக்களுக்கு சான்ஸ்.. மின் கட்டணத்தை செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் ஜூலை 15-ஆம் தேதிக்குள் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நுகர்வோர்கள் ஜூலை 30-ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தலாம்.
மேலும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள தாழ்வழுத்த மின் நுகர்வோர்கள், கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை வீடுகளில் மின் வாரிய ஊழியர்கள் மின் பயன்பாட்டை கணக்கெடுத்த 20 நாட்களுக்குள் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் மின்விநியோகம் துண்டிக்கப்படும்.
சென்னை வெற்றியை தொடர்ந்து.. கோவையிலும் இன்று முதல் கொரோனாவுக்கு சித்த மருத்துவ சிகிச்சை
வீட்டில் இருந்ததால் கட்டணம் அதிகரிப்பு
அதற்குப் பின்னர் அபராதத்துடன் கட்டணம் செலுத்தியதும் மின்வினியோகம் மீண்டும் வழங்கப்படும். ஆனால் ஊரடங்கு காரணமாக மின் கட்டணம் செலுத்த மின்வாரியம் அவகாசம் வழங்கியது. ஆனால் இந்த நேரத்தில் கூடுதல் கட்டணம் வந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருப்பதால் கூடுதல் பயன்பாடு காரணமாக கட்டணம் அதிகரித்திருப்பதாக தெரிவித்த மின்சார வாரியம், மின் கட்டணம் செலுத்த நேற்று வரை அவகாசம் வழங்கி இருந்தது.
அவகாசம்
ஊரடங்கு காரணமாக பொதுமக்களில் பலர் வேலைக்கு செல்ல இயலாமல் கைகளில் பணம் இன்றி திண்டாடி வருகின்றனர். அவர்கள், மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் திணறினர். இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் 30ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாக மின் வாரியம் அறிவித்துள்ளது.
6 மாவட்டங்களுக்கு சலுகை
இது தொடர்பாக மின் பகிர்மான கழகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் சில பகுதிகளில் உள்ள தாழ்வழுத்த மின் நுகர்வோருக்கு மின் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி மார்ச் 25ஆம் தேதி முதல் ஜூலை 14-ஆம் தேதி வரை இருப்பின், அவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்த கடைசி தேதி மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு வரும் 30-ஆம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் கட்டணம்
தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள தாழ்வழுத்த மின் நுகர்வோர்கள் தங்களின் பகுதிகளில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்தலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கமளித்துள்ள, மின் பகிர்மான கழகம், அதிக தொகை வசூலிக்கப்பட்டிருந்தால் எதிர்வரும் மாதங்களில் அது சரி செய்யப்படும் என அறிவித்து உள்ளது. இந்நிலையில் இந்த கூடுதல் மின் கட்டண சர்ச்சை குறித்து திமுக தலைவர் திரு ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுடன் இன்று காலை காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி போராட்டத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.