"இ பாஸ் கேட்பது மனித உரிமைக்கு எதிரானது.." மனித உரிமை ஆணையம் அதிரடி என்ட்ரி! தமிழக அரசுக்கு நோட்டீஸ்
சென்னை: தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பதற்கு இபாஸ் நடைமுறையை கட்டாயப்படுத்துவது, மனித உரிமை மீறல்தானே, என்று கேட்டு, மாநில மனித உரிமைகள் ஆணையம் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாடு முழுக்க தற்போது கொரோனா வைரஸ் தொடர்பான 7வது ஊரடங்கு சட்ட காலத்தில் இருக்கிறோம். ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 31ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு காலம் அமலில் இருக்கிறது.
இந்த காலகட்டத்தில் பெரும்பாலான பிற மாநிலங்களில் மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பதற்கு இ பாஸ் நடைமுறை அகற்றப்பட்டுள்ளது.
இபாஸ் இல்லாமல் எல்லையில் குழந்தைகளுடன் தவித்த கேரள மக்கள்... விதிகளை தளர்த்தி அனுப்பிவைத்த தமிழகம்
இ பாஸ் கட்டாயமாம்
அதேநேரம், தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பதற்கு தனியார் வாகனங்கள் இ பாஸ் பெறுவது கட்டாயம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அவசர தேவைக்காக பாஸ் கேட்டு விண்ணப்பிப்பதற்கு கிடைப்பதில்லை என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதனால் பல மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
பணம் கொடுத்தால் இ பாஸ்
இப்படி ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம், சில ஏஜெண்டுகளிடம் 3000 ரூபாய் பணம் கொடுத்தால் அரை மணி நேரத்தில் பாஸ் தயாராகி விடுவதாகவும் அடுக்கடுக்காக புகார்கள் எழுகின்றன. இந்த புகார்களை தொடர்ந்து இ பாஸ் நடைமுறையை தமிழக அரசு கைவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எதிர்க்கட்சி கோரிக்கை
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூட பாஸ் வழங்கும் நடைமுறையை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால், அரசு இ பாஸ் நடைமுறை தொடரும் என்று அறிவித்தது. இ பாஸ் வழங்க, மாவட்டத்துக்கு தற்போது ஒரு குழு என்றிருப்பது இனிமேல் இரண்டு குழுக்களாக அதிகரிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
நோட்டீஸ்
இந்த நிலையில்தான் மருத்துவ சேவைகள், கல்வித் தேவைகள் உள்ளிட்ட பல அத்தியாவசிய பணிகளுக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முடியாமல் மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகிறார்கள் என்று மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகார் ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த புகாரை பரிசீலித்து மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர், தமிழக தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மனித உரிமைக்கு எதிரானது
அதில், இ பாஸ் நடைமுறை தொடர்வது என்பது மனித உரிமைகளுக்கு எதிரான செயல் அல்லவா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசு அனுமதி வழங்கிய பிறகும், இ பாஸ் நடைமுறை எதற்காக தொடரப்படுகிறது என்பதற்கும் விளக்கம் கேட்டுள்ளது. நான்கு வார காலத்துக்குள் இந்த நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
இ பாஸ் ரத்து?
எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் ஒரு பக்கம், மனித உரிமை ஆணையத்தின் நோட்டீஸ் மறுபக்கம் என, நெருக்கடி, அழுத்தம் அதிகரித்து வருவதால், தமிழக அரசு விரைவில் இ பாஸ் வழங்கும் நடைமுறையை நிறுத்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன