மேகதாது நோக்கி பேரணி சென்ற தமிழக விவசாயிகள்.. கர்நாடக எல்லையில் கைது!
மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவை நோக்கி பேரணி நடத்திய தமிழக விவசாயிகள் 300 பேர் கர்நாடக - தமிழக எல்லையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவை நோக்கி பேரணி நடத்திய தமிழக விவசாயிகள் 300 பேர் கர்நாடக - தமிழக எல்லையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த விவகாரம் தற்போது பெரிய புயலை கிளப்பி இருக்கிறது. இதனால் தமிழக மக்கள் பெரிய அளவில் பாதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
மேகதாது அணை திட்டத்தின் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்து தமிழர்களை வஞ்சித்துள்ளது. வரைவு அறிக்கைக்கு அனுமதி பெற்றதன் மூலம் கர்நாடகா அணையை கட்டுவதற்கான பகுதிகளை சோதனை செய்து வருகிறது.
இந்த நிலையில் மேகதாது நோக்கி சென்று போராட்டம் நடத்துவதற்காக தமிழக விவசாயிகள் திட்டமிட்டு இருந்தனர். மேகதாது பகுதியிலேயே தமிழக விவசாயிகளின் கஷ்டத்தை தெரிவித்து போராட்டம் நடத்த தமிழக விவசாயிகள் திட்டமிட்டு இருந்தனர்.
மேகதாதுவில் உள்ள விவசாயிகளிடம் நேரடியாக பேசினால்தான் தமிழக விவசாயிகளின் நிலை அவர்களுக்கு புரியும் என்று விவசாயிகள் இந்த போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பி ஆர் பாண்டியன் இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தினார்.
ஆனால் மேகதாது நோக்கி சென்ற தமிழக விவசாயிகள் தமிழக போலீசால் கைது செய்யப்பட்டனர். கர்நாடக எல்லையில் ஓசூர் அருகே போலீஸார் விவசாயிகளை தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். பெங்களூருக்குள் நுழைந்தால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று விவசாயிகளை கைது செய்துள்ளனர்.
பி.ஆர் பாண்டியன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்ற போது கைது செய்யப்பட்டனர். இதனால் அங்கு தற்போது பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.