மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகமா?.. ஆஹா.. பொன்னாள் இன்று… பாராட்டும் ஜெயக்குமார்
சென்னை: மீன் வளத் துறைக்கு இன்றைய தினம் பொன்னாளாக இருக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்த ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பல புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டன.
தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட்ட கடைசி பட்ஜெட் இதுவாகும். இந் நிலையில், இந்த பட்ஜெட்டை மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், வரவேற்று பேசியுள்ளார். அவர் கூறியதாவது: 5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் ஈட்டுபவர்களுக்கு, வருமான வரி கிடையாது.
6.5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் ஈட்டுபவர்கள் பி.எப் உள்ளிட்ட முதலீடு செய்திருக்கும் பட்சத்தில் அவர்களுக்கும் வரி கிடையாது. அதன் மூலம் 3 கோடி நடுத்தர மக்கள் பயன் பெறுவார்கள் என்று பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தனி நபர் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அதேபோல, மீன் வளத் துறைக்குத் தனியாக அமைச்சகம் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதும் சிறப்பு. இது மீன் வளத் துறைக்குப் பொன்னாளாக இருக்கும்.
மத்திய அரசு இன்று தாக்கல் செய்துள்ளது அதன் கடைசி பட்ஜெட்டா என்று தெரியவில்லை. அதனை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, எதிர்க்கட்சிகள் அல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.