உலக முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.3.44 லட்சம் கோடி முதலீடு ஒப்பந்தங்கள்.. எடப்பாடி அறிவிப்பு
சென்னை: உலக முதலீட்டாளர் மாநாட்டில், ரூ.3.44 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்று, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில், உலக முதலீட்டாளர் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில், புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
தயாரிப்புகள்
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு 250க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க வகை செய்து, காட்சி அரங்குகள் ஏற்படுத்தப்பட்டன. அதில், பல்வேறு தொழில் சார்ந்த நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தின.
|
3.44 லட்சம் முதலீடு
இன்று இறுதி நாள் நிகழ்ச்சிக்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த மாநாட்டில், எவ்வளவு ஒப்பந்தங்கள் வந்தன குறித்த தகவலையும், எவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் தகவல் வெளியிட்டுள்ளார். இரண்டு நாட்கள் நடைபெற்ற தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், ரூ.3.44 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
இரண்டாம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெரிய தொழில் நிறுவனங்கள் மட்டுமல்லாமல் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இருநாட்களாக நடைபெற்ற "தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு" -2019ன் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. சுமார் 10 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
சிறு, குறு நிறுவனங்கள்
முதல்வர் குறிப்பிட்டதைபோல, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சார்பில் மட்டும், 12,000 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.39,000 கோடியாகும். பெரிய நிறுவனங்களில், அதானி குழுமம், 10,000 கோடி மதிப்புக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னை பெட்ரோலிய எண்ணை நிறுவனம், சார்பில் ரூ.27,400 கோடி மதிப்புக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.