வருது வருது.. 2000 ரூபாய் உங்க அக்கவுண்டுக்கு.. ரூ.1200 கோடி நிதி ஒதுக்கியது தமிழக அரசு
சென்னை: வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.2000 நிதி உதவி வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் விதி எண் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஒரு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். அதில், தமிழகம் முழுக்க உள்ள 60 லட்சம் ஏழை தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகள் , குடும்பத்திற்கு தலா 2 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் 2018-19 ஆம் நிதியாண்டுக்கான துணை மதிப்பீட்டில் இந்த அறிவிப்பிற்காக ரூ.1200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் இடம்பெற்றுள்ளது.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று இந்த துணை மதிப்பீட்டை தாக்கல் செய்தார். அதில், பொங்கல் பண்டிகையின்போது, வறுமைக்கோட்டுக்கு கீழேயுள்ள, ரேஷன்கார்டுதாரர்ரகளுக்கு தலா ரூ.1000 வழங்கப்பட்டதற்கு, அரசுக்கு சுமார் ரூ.2019 கோடி செலவானதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, இந்த திட்டத்தை உடனடியாக அமல்படுத்த தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது என்பது உறுதியாகிவிட்டது. கிராமங்களில் வசிக்கும் 35 லட்சம் குடும்பங்களும், நகர்புறங்களில் வசிக்கும் 25 லட்சம் குடும்பங்களும் இந்த திட்டத்தால் பலன் பெறுவார்கள். பலனாளிகளுக்குகளுக்கு ஒரே தவணையில் வங்கி கணக்கு மூலமாக இந்தத் தொகை வழங்கப்படும்.
சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்த செந்தில் ஆறுமுகம் என்பவர் ஹைகோர்ட்டில் 2000 ரூபாய் வழங்குவதற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.