ஆன்லைன் வகுப்புகளில் அத்துமீறலை தடுக்க.. ஆன்லைன் வகுப்பிற்கான நெறிமுறைகளை வெளியிட்ட தமிழ்நாடு அரசு
சென்னை: கொரோனா பெருந்தொற்று காரணமாகப் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் முறையில் கல்வி கற்பிக்கப்பட்டு வரும் நிலையில், பாலியல் வன்முறையிலிருந்து பள்ளி மாணவர்களைப் பாதுகாக்க ஆன்லைன் வகுப்பிற்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. கொரோனா பெருந்தொற்று காரணமாகப் பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையிலேயே நடைபெறுகிறது.
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை...7 மாநிலங்களில் சதமடித்தது - மும்பையில் 1 லிட்டர் ரூ. 103
அதிலும் குறிப்பாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போட தற்போது வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பதில் பெரும் கேள்வி நிலவுகிறது.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
இந்நிலையில், ஆன்லைன் வகுப்புகளில் பள்ளி மாணவிகள் மீது பாலியல் வன்முறை நடைபெறுவதாகக் கடந்த சில வாரங்களாகவே புகார்கள் எழுந்துள்ளன. இதன் அடிப்படையில் ஆசிரியர்கள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக ஆன்லனைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷும் தெரிவித்திருந்தார்.
தமிழ்நாடு அரசு அறிவிப்பு
அதன்படி தற்போது பாலியல் வன்முறையிலிருந்து பள்ளி மாணவர்களைப் பாதுகாக்க ஆன்லைன் வகுப்பிற்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:
ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு அமைக்கப்படும். இக்குழுவில் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர் இருவர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் இருவர், பள்ளி நிர்வாக உறுப்பினர் ஒருவர், ஆசிரியரல்லாத பணியாளர் ஒருவர் மற்றும் தேவைக்கேற்பப் பள்ளி சாரா வெளிநபர் ஒருவர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர்.
ஒரு மாத காலத்தில் மாநில அளவில் ஒரு கட்டுப்பாட்டு அறையைப் பள்ளிக் கல்வித்துறை உருவாக்கும். அனைத்துத் தரப்பினரும் தங்களது குறைகளை எளிதாகத் தெரிவிக்கும் வகையில் இம்மையத்தில் கட்டணமில்லா நேரடித் தொலைப்பேசி (Hot Line) மற்றும் தனிப்பட்ட மின்னஞ்சல் வசதி உருவாக்கப்படும்.
துறை சார்ந்த வல்லுநர்கள்
மாநில பாதுகாப்பு ஆலோசனைக் குழு தங்களுக்கு வரப்பெற்ற எந்த வகையான புகார்களையும் மாநில கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
இந்த மையத்தில் புகார்களைத் தெரிவிப்பது மட்டுமின்றி, அது சார்ந்து பின்பற்ற வேண்டிய அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு வழங்கப்படும்.
பள்ளிகளைச் சார்ந்த அனைத்து அங்கத்தினருக்கும் போக்சோ சட்டத்தில் குறிப்பிட்டுள்ள பாலியால் ரீதியான குற்றங்கள் குறித்த முழு புரிதல் உண்டாகும் வகையில் வருடந்தோறும் பயிற்சிகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான விழிப்புணர்வு கட்டகம் பள்ளிக்கல்வித்துறையால் உருவாக்கித் தரப்படும்.
சுய தணிக்கை
பள்ளிகளில் பாதுகாப்பை மேம்படுத்தவும், சுய தணிக்கை (Self-audit) செய்வதை உறுதி செய்யவும் பள்ளிக் கல்வித்துறையால் கட்டகம் (Module) உருவாக்கப்பட்டு வழங்கப்படும்.
இணையவழிக் கற்றல்- கற்பித்தல் நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வகுப்பறைச் சூழலுக்கேற்றவாறு கண்ணியமாக உடை அணிய வேண்டும்.
இணையவழிக் கற்றல்- கற்பித்தல் நிகழ்வுகளை முழுமையாகப் பதிவு செய்வதோடு, அப்பதிவுகளைக் குறிப்பிட்ட இடைவெளியில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவைச் சேர்ந்தவர்கள் தொடர் ஆய்வு செய்யவேண்டும்.
பாதுகாப்புப் பெட்டிகள்
புகார் மற்றும் மாணவர்களின் கருத்துகளை எளிதாகத் தெரிவிப்பதற்காகப் பள்ளி வளாகத்தில் பாதுகாப்புப் பெட்டிகள் (Safety Boxes) வைக்கப்படும். மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளை ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்கும்.
மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு, பள்ளியில் பெறப்பட்ட அனைத்து புகார்களையும் பதிவு செய்யத் தனியாக ஒரு பதிவேட்டைப் பராமரிக்கும். புகாரானது எந்த முறையில் பெறப்பட்டிருந்தாலும் (வாய்மொழி உட்பட) இந்தப் பதிவேட்டில் பதியப்பட வேண்டும்.
அனைத்துப் பள்ளிகளிலும் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 15 முதல் நவம்பர் 22 வரை 'குழந்தைகள் துன்புறுத்தலைத் தடுக்கும் வாரம்' என விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.