பறவைக் காய்ச்சல்.. கேரளாவிலிருந்து கோழிகள், வாத்துகளை கொண்டு வர தமிழகத்தில் "நோ என்ட்ரி"
சென்னை: கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு கோழிகளை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கேரளாவில் ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான வாத்துகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. அவற்றில் இருந்து சில வாத்துகளை பரிசோதனை செய்தனர்.
இதில் 5 வாத்துகள் பறவைக் காய்ச்சலை உண்டாக்கும் எச்5என்8 வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது. இதையடுத்து பறவைக் காய்ச்சல் மேலும் பரவுவதை தடுக்க சுற்றுப்பகுதிகளில் இருந்த 12 ஆயிரம் வாத்துகள் கொல்லப்பட்டன.
மேலும் 36 ஆயிரம் வாத்துகளை கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பறவைக் காய்ச்சல் தமிழகத்திற்கு வருவதை தடுக்க கேரளாவில் இருந்து கோழிகள், வாத்துகளை கொண்டு வர கால்நடைத் துறை தடை விதித்துள்ளது.
கேரளாவில் கோழி, வாத்துகளின் முட்டை, இறைச்சி, தீவனங்களைக் கொண்டு வரும் வாகனங்களை திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. கேரள எல்லையில் உள்ள 6 மாவட்டங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் கால்நடைத் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.