விநாயகர் சதுர்த்தி.. தெருக்களில் சிலை வைக்கக் கூடாது.. வீட்டிலேயே கொண்டாடுங்க.. தமிழக அரசு உத்தரவு
சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகையை மக்கள் வீட்டிலேயே கொண்டாட வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது. சிலைகளை வைப்பதற்கும், ஊர்வலத்திற்கும் அனுமதியில்லை என்றும் அரசு கூறியுள்ளது.
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை 22ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.
தொற்று நோய் பரவலை தடுக்கவும், பொதுமக்களின் நலன் கருதியும், பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதிமுக -பாஜக கூட்டணி... கூடா நட்பு கேடாய் முடியும்... தயாநிதி மாறன் எம்.பி. விமர்சனம்
சிலைகள்
நோய் பரவலை தடுக்கவும் பொதுமக்கள் நலன் கருதியும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதோ, அல்லது சிலைகளை வைத்து விழாக் கொண்டாடுவதோ, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வது, சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் அனுமதிக்க இயலாது.
வீடுகளில் கொண்டாட்டம்
எனவே, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட அறிவுறுத்தப்படுகிறது. மேலும், பண்டிகை கொண்டாட தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கும், சந்தைகளுக்கும் செல்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
வழிபாடுகள்
சிறிய, திருக்கோவில்களில் பொது மக்கள் வழிபட ஏற்கனவே அனுமதி அளித்துள்ள நிலையில், அத்தகைய திருக்கோவில்களில் வழிபாடு செய்யும்போது அறிவுறுத்தப்பட்டுள்ள நெறிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க, பொதுமக்களும் திருக்கோவில் நிர்வாகம் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சமூக இடைவெளி
மேலும் அவ்வாறு வழிபாட்டுத் தலங்களுக்கும் பொது இடங்களுக்கும் செல்பவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து உரிய சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.