நல்லகண்ணுவுக்கும் கக்கன் குடும்பத்தினருக்கும் பொது ஒதுக்கீட்டில் வீடு.. தமிழக அரசு உறுதி
சென்னை: நல்லகண்ணுவுக்கும் கக்கன் குடும்பத்தினருக்கும் பொது ஒதுக்கீட்டில் வீடு வழங்கப்படும் என தமிழக அரசு உறுதியளித்துள்ளது.
சென்னை தி.நகரில் சிஐடி காலனியில் உள்ள தமிழக வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கக்கன் குடும்பத்தினருக்கு எம்ஜிஆர் வீடு ஒதுக்கியிருந்தார். அது போல் கடந்த 2007-ஆம் ஆண்டு கரைப்படியாத கைகளுக்கு சொந்தக்காரரான எளிமை விரும்பியான நல்லகண்ணுவுக்கு தமிழக அரசு வீடு ஒதுக்கியது.
மொத்தம் 119 வீடுகள் உள்ள நிலையில் அது மிகவும் பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. அந்த வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்டும் திட்டத்தை கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் முயற்சித்து வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்புவாசிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து குடியிருப்பை காலி செய்ய மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
மோர் குடிங்க.. கூலா ஓட்டுப் போடுங்க.. அசத்திய புதுச்சேரி தேர்தல் ஏற்பாடுகள்!
இந்த நிலையில் நல்லகண்ணு உள்பட 96 குடியிருப்புவாசிகள் காலி செய்துவிட்டனர். எனினும் கக்கன் குடும்பத்தினருக்கு வரும் 18-ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து நல்லகண்ணுவுடன் தொலைபேசியில் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ் நிச்சயம் அவருக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார். இந்த நிலையில் பொது ஒதுக்கீட்டில் மாத வாடகைக்கு நல்லகண்ணுவுக்கும் கக்கன் குடும்பத்தினருக்கும் வீடு ஒதுக்கப்படும் என வீட்டு வசதி வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நல்லகண்ணுவுக்கும் கக்கன் குடும்பத்தினருக்கும் அரசு குடியிருப்பில் பொது ஒதுக்கீட்டில் மாத வாடகையில் வீடு ஒதுக்கப்படும். புதிய கொள்கை இறுதி செய்யப்பட்ட பிறகு பொது வாழ்க்கையில் சமூகத்தில் முக்கிய பங்காற்றுபவர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்துள்ளது.