அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க முடிவு.. காத்திருக்கும் சிக்கல்கள்.. என்ன நடக்கும்?
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சாத்திய கூறுகளை ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகம் இந்தியாவின் முதல் பொறியியல் பல்கலைக்கழகம் ஆகும். இந்தியாவில் தற்போது செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்களில் மிக முக்கியமான கல்வி நிறுவனமாக அண்ணா பல்கலைக்கழகம் திகழ்கிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு மாணவர்கள் படிக்கிறார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்வது கடினம் என்பதால் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் மட்டுமே இங்கு சீட் பெற முடிகிறது. வருடம் தோறும் பல லட்சம் பொறியாளர்களை அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்குகிறது.
கல்லூரிகள்
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ்தான் இயங்கி வருகிறது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்ய 5 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
என்ன செய்வார்கள்
இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இன்று காலையில் இருந்து இதற்கான பணிகள் தொடங்கும். தற்போது இருக்கும் அண்ணா பல்கலைக்கழகம் மத்திய அரசின் கீழ் கொண்டு செல்லப்படும். அதன்பின் அதற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டு அது தனியாக செயல்படும்.
இன்னொரு பல்கலைக்கழகம்
இன்னொரு பக்கம் தனியாக இன்னொரு பல்கலைக்கழகம் தொடங்கப்படும். அதற்கு கீழ் மற்ற தமிழக பொறியியல் கல்லூரிகள் கொண்டு வரப்படும். தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள இன்னொரு பல்கலைக்கழகம் கொண்டு வரப்படும்.
மாணவர்கள் எதிர்ப்பு
இந்த திட்டம் காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நுழைவு தேர்வு கொண்டு வரப்பட வாய்ப்புள்ளது . அதேபோல் தமிழக அரசின் 69% இடஒதுக்கீடும் முற்றாக நீக்கப்படும். இதனால் இந்த முடிவிற்கு அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.