தமிழகத்திலுள்ள கல்லூரிகளுக்கு நாளை முதல் ஜனவரி 1 வரை விடுமுறை.. அரசு அதிரடி அறிவிப்பு
Recommended Video
சென்னை: தமிழகத்தில் உள்ள கல்லூரிகள், பல்கலைக் கழகங்களுக்கு நாளை முதல் ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திப்போயுள்ளன.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழகம் முழுக்க மாணவர்களிடையே போராட்டம் தீவிரமாக பரவி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும். கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார்.
கிறிஸ்துமஸ், உள்ளாட்சி தேர்தல், புத்தாண்டையொட்டி ஜனவரி 1-ஆம் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிவடைந்து ஜனவரி 2ம் தேதி பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகள் துவங்கும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் இக்காலகட்டத்தில் நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜனவரி 2ம் தேதி முதல் 10ம் தேதிக்குள், இந்த தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல், கிறிஸ்துமஸ்தான், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை வழங்க காரணம் என்றால், பள்ளிகளுக்கு ஏன் விடுமுறை விடப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், அரையாண்டு விடுமுறை இக்காலகட்டத்தில் பள்ளிகளுக்கு விடப்படுவதால் அதுகுறித்து அறிவிப்பு வெளியாகவில்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.