சென்னையில் கொரோனா சிறப்பு மருத்துவமனை திறப்பு.. எய்ம்சுக்கு இணையான வசதிகள் உள்ளன- முதல்வர் தகவல்
சென்னை: கொரானா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கிண்டியில் பிரத்தியேக கொரோனா மருத்துவமனை பிரிவு இன்று திறந்து வைக்கப்பட்டது.
கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் இந்த மருத்துவமனை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நிருபர்களிடம் எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டியில் கூறியதாவது:
ரூ.136.86 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனையில் மொத்தம் 750 படுக்கை வசதி உள்ளன. அனைத்து வசதிகளுடனும் கூடிய மருத்துவமனையாக அமைக்கப்பட்டுள்ளது. இதில், அடித்தளம், தரைத்தளம், இரண்டாம் தளம் மற்றும் மூன்றாம் தளம் செயல்படுகிறது.
கொரானா- தனிமைப்படுத்தப்பட்டோர் மையமாக மாறுகிறதா விஜயகாந்தின் பொறியியல் கல்லூரி?- அதிகாரிகள் ஆய்வு
அனைத்து வசதிகள்
இந்த மருத்துவமனையில் அனைத்து வசதியும் உள்ளது. அடித்தளத்தில் வரவேற்பு அறை, அதிநவீன சிகிச்சை பிரிவு மருத்துவம், மற்றும் ரத்த சேமிப்பு அறை செயல்படும். தரைத்தளத்தில் சிடி ஸ்கேன், அல்ட்ரா சோனோகிராம், எக்ஸ்ரே போன்ற கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் மற்றும் இரண்டாம் தளத்தில் அறுவை சிகிச்சை அரங்குகள், தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவ கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளன.
அதிநவீன இணையதள வசதி
மூன்றாம் தளத்தில், கொரோனா நோயாளிகள் மன அழுத்தத்தை குறைக்க யோகா பயிற்சி மேற்கொள்ள பிரத்தியேக கூடம் மற்றும் நோயாளிகள் காணொலிக் காட்சி மூலமாக மருத்துவர்களிடம் சந்தேகங்களை கேட்பதற்கும் உறவினர்களுடன் பேசுவதற்கும், அதிநவீன வைஃபை வசதி செய்யப்பட்டுள்ளது.
எய்ம்ஸ், ஜிப்மர்
எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவமனைக்கு இணையாக அதிநவீன மருத்துவமனையாக இது உள்ளது. 750 படுக்கைகளில், 300 படுக்கைகளில் வென்டிலேட்டர் வசதிகள் இருக்கும், மேலும் 70 படுக்கைகள் தீவிர சிகிச்சை பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு 100 மருத்துவர்கள், 90 செவிலியர்கள், மருத்துவம் சாராத பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அனுபவம் வாய்ந்த டாக்டர்கள்
இங்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிப்பதற்காக சிகிச்சையில் அனுபவம் வாய்ந்த வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை, ஸ்டான்லி பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
ஆக்சிஜன் வசதி
கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு அவர்களுக்கு, மூச்சு திணறல் ஏற்பட்டு வந்தால் கூட, உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கு அனைத்து வசதிகளும் இந்த மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது. எந்தவித காலதாமதமும் இல்லாமல் வருகின்றவர்களுக்கு உயிரிழப்பு ஏற்படாத வண்ணம் உடனடி சிகிச்சை அளிக்க வசதியாக சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் வசதிகள் உள்ளன. தயார் நிலையில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதி எண்ணிக்கை தமிழகம் முழுக்க 22 ஆயிரத்திற்கு மேல் உள்ளது. சென்னை மாநகராட்சி பகுதியில், 13 ஆயிரத்து 664 படுக்கை வசதிகள் உள்ளன.