தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் போராட்டம்.. காத்திருந்தும் மருத்துவர்கள் வரவில்லை.. நோயாளிகள் அவதி
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் புறநோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்க வேண்டும். 13 ஆண்டுகளில் தகுதிக்கேற்ற ஊதியம் மற்றும் பயணப்படிகளை வழங்க கோரி புறநோயாளிகளுக்கு அளிக்கும் சிகிச்சைகளை புறக்கணித்து அரசு மருத்துவர்கள் இன்று தமிழகம் முழுவதும் பணிக்கு வரவில்லை.
தற்போது மழைக் காலம் என்பதாலும் காலநிலை மாற்றத்தாலும் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற முடியாமல் மக்கள் பரிதவித்தனர். இதையடுத்து மருத்துவர்கள் இல்லாததால் மருந்தாளுநர்களிடம் இருந்து மாத்திரைகளை வாங்கிச் சென்றனர்.
மருத்துவர்களின் போராட்டத்தை தொடர்ந்து சென்னை, மதுரை, நெல்லை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். கரூர் மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வெளியே நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.