மருத்துவர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் காலி பணியிடமாக அறிவிக்கப்படும்.. விஜயபாஸ்கர்
சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள் நாளை காலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் இல்லாவிட்டால் அந்த இடம் காலிப்பணியிடமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கால முறை ஊதியம், பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள், அக்டோபர் 25ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள், பணிக்கு திரும்ப வேண்டும் என அரசு பலமுறை வேண்டுகோள் விடுத்து வருகிறது. இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
விஜயபாஸ்கர்
இந்நிலையில் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவர்கள் நாளையும் பணிக்கு வராவிடில் பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்படும். பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கைக்கு உள்ளாகும் பணிக்கு வராத மருத்துவர்களின் பணியிடங்கள், காலி பணியிடமாக கருதப்பட்டு மாற்று மருத்துவர் நியமிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தார்.
அரசு தயங்காது
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை இன்று சந்தித்த போதும், மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்க தயங்காது என்றும் தெரிவித்து இருந்தார்.
பணிக்கு திரும்பிவிட்டனர்
இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று(வியாழக்கிழமை) மாலை மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "மருத்துவர்கள் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 2,160 அரசு மருத்துவர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். மொத்தம் 16,475 மருத்துவர்களில் 2,523 பேர் மட்டும் தான் இதுவரை கையெழுத்திடவில்லை. விழுப்புரம், கடலூர், திருப்பூர், நெல்லையில் மருத்துவர்கள் முழுமையாக பணிக்குத் திரும்பிவிட்டனர்
அரசு மருத்துவர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள் நாளை காலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். பணிக்கு திரும்பாத மருத்துவர்களின் இடங்களை காலி பணியிடங்களாக அறிவிக்கப்படும். புதிய மருத்துவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.
அரசு பேச்சுவார்த்தை
மருத்துவர்களுடன் துறை செயலரும், நானும் 3 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். போராட்டத்தை கைவிட்டு வந்தால் மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது. நாளை புதிதாக நியமிக்கப்படும் 188 மருத்துவர்களை கொண்டு பணிக்கு வராத மருத்துவர்களின் இடங்கள் நிரப்பப்படும். மேலும் 283 புதிய மருத்துவர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளோம்" என்றார்.