ரூ.3000 கொடுத்தால் இ பாஸ்.. அதிகரித்த ஏஜென்ட்கள்.. உஷாரான தமிழக அரசு.. ஈஸியாக பாஸ் கிடைக்க நடவடிக்கை
சென்னை: 7வது கட்ட ஊரடங்கு காலத்திலும் தமிழகத்தில் வாகனப் போக்குவரத்துக்கு கடுமையான கெடுபிடிகள் காணப்படுகின்றன.
இதைப் பயன்படுத்திக் கொண்டு, இடைத்தரகர்கள் பலர் காசு பார்த்து வருவதுதான் கொடுமை. ஆகஸ்டு 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 7வது கட்ட ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.
இதையடுத்து மத்திய அரசு ஏற்கனவே உள்ள ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளுடன் அன்லாக் 3 என்ற பெயரில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
ஒரேயடியாக.. ஜூலை 31ம் தேதிவரை அரசு, தனியார் பொதுப் பஸ் போக்குவரத்துக்கு தடை.. தமிழக அரசு அதிரடி
இ பாஸ் நடைமுறை
தமிழக அரசு, மருத்துவக் குழுவுடன் ஆலோசித்து, மாநிலத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி அறிவிப்பு வெளியிட்டது. அதில் முக்கியமான விஷயம் பொது போக்குவரத்து ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை கிடையாது என்பது. மற்றொரு முக்கியமான அறிவிப்பு, மாவட்டங்களுக்கு இடையே தனியார் வாகனங்களில் பயணிப்பதற்கு இ பாஸ் நடைமுறை அவசியம் என்பதாகும்.
தொழிலாளர்கள்
50% ஊழியர்களுடன் பணியாற்றக்கூடிய நிறுவனங்கள் 75% ஊழியர்களுடன் பணியை தொடரலாம் என்று தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு, மறுபக்கம், இ பாஸ் நடைமுறை தொடரும் என்று அறிவித்துள்ளது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர்கள் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்வதற்குக் கூட பாஸ் தேவைப்படுவதால் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ தேவைகளுக்காக அருகிலுள்ள நகரங்களுக்கு செல்ல வேண்டுமானால்.. ஒருவேளை அது வேறு மாவட்ட நகரம் என்றால், இ பாஸ் கிடைப்பதில்லை. கிராமப்புற மக்களுக்கு பாஸ் வாங்கும் அளவுக்கான விழிப்புணர்வும் கிடையாது.
பணம் பெற்று இ பாஸ்
இந்த நிலையில்தான் மற்றொரு பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. 3 ஆயிரம் அல்லது 2,000 என ஆளுக்கு ஏற்றாற்போல தொகையை நிர்ணயித்து கொண்டு இ பாஸ் வாங்கி கொடுப்பதற்கு இடைத்தரகர் கும்பல் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. போவதற்கும், வருவதற்கும் சேர்த்து இந்த தொகையாம். கலெக்டர் அலுவலகங்களில் தங்களுக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி இவர்கள் பாஸ் பெற்றுக் கொடுப்பதாக கூறப்படுகிறது. நியாயமான முறையில் ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்களுக்கு பாஸ் கிடைக்காமல் தட்டிப் போகும் நிலையில், இதுபோன்ற இடைத்தரகர்களிடம் ரூ.3000 கூகுள் பே மூலமாக பரிமாற்றம் செய்து விட்டால், அடுத்த அரை மணி நேரத்தில் இ பாஸ் தேடி வருகிறது.
இ பாஸ் யாருக்கானது?
எனவே இ பாஸ் திட்டம் யாருக்கானது? யாருக்கு பலன் அளிக்கக்கூடியது? என்று கேள்விகள் எழுகின்றன. பணம் இருப்போருக்கு பாஸ் கிடைப்பதும், பிறருக்கு நியாயமான வழியில் முயன்றால் கிடைக்காததும், எந்த மாதிரியான நடைமுறை என்ற கோபம் மக்களிடம் எழுகிறது. இதுபோன்ற புகார்கள் அதிகமாக வருவதால், தற்போது இ பாஸ் நடைமுறையை எளிமைப்படுத்த தமிழக அரசு எழுத்துபூர்வமற்ற உத்தரவை பிறப்பித்துள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வேலூர் மாவட்டம்
இது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் அளித்துள்ள ஒரு பேட்டியில், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விட்டால் 100% பாஸ் வழங்க வேண்டுமென்று எங்களது மாவட்டத்தில் உத்தரவிட்டுள்ளோம். திருமணத்திற்கு செல்வதற்கு பாஸ் கேட்டுவிட்டு அழைப்பிதழை ஆவணமாக காட்டாமல் இருப்பது.. மருத்துவ தேவை என பாஸ் கேட்டுவிட்டு அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்காமல் இருப்பது என, எந்த தேவைகளுக்கு செல்கிறார்களோ அந்த தேவைகளுக்கான ஆவணத்தை காட்டாதவர்களுக்கு மட்டும்தான் பாஸ் கொடுக்கப்படுவது கிடையாது. மற்றபடி ஆவணத்தோடு விண்ணப்பம் சமர்ப்பிக்கும் அனைவருக்கும் 100% பாஸ் வழங்க உத்தரவிட்டுள்ளேன். எனவே பொதுமக்கள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
எளிதாக கிடைக்குமா இ பாஸ்?
அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களும், தற்போது இ பாஸ் வழங்கும் நடைமுறையை எளிமையாக்க தொடங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எளிதாக இ பாஸ் கொடுக்கப்பட வேண்டும் என்ற முடிவால், இனிமேல், உரிய ஆவணங்களுடன் இ பாஸ் கேட்டு தாக்கல் செய்வோருக்கு எளிதாக பாஸ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.