உதவி செய்வதை தடுப்பது நோக்கம் அல்ல.. தன்னார்வலர்கள் உதவி செய்ய தடை குறித்து தமிழக அரசு விளக்கம்
சென்னை: தன்னார்வலர்கள் யாருக்கும் உதவி செய்ய தடைவிதிக்கவில்லை. மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
வறுமையில் வாடும் ஏழை மக்களுக்கு தன்னார்வலர்கள் நேரடியாக வந்து உதவி செய்யக் கூடாது என தமிழக அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து திமுக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெறுவதற்கு முன்னர் அரசு இத்தகைய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருக்கையில் , சுனாமி, பெரு வெள்ளம், ஓகி புயல், வர்தா புயல் போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்களின் வீடுகள், தினசரி உபயோகப் பொருட்கள், வாழ்வாதாரம் போன்றவை இழந்து நின்ற சோதனையான காலகட்டத்தில் தன்னார்வலர்கள் மற்றும் அமைப்புகள் செய்த பணிகள் மகத்தானது.
144 தடை உத்தரவு
அதை தமிழ்நாடு அரசு மனமுவந்து பாராட்டியதே தவிர, நிவாரணம் வழங்க எந்த ஒரு கட்டுப்பாடும் விதிக்கவில்லை. அப்போதைய சூழலில் பொதுமக்கள் கூடுவதற்கு எந்த ஒரு தடை உத்தரவும் கிடையாது. ஆனால் தற்போது இந்த பேரிடர் கொடிய வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவுகளை எல்லோரும் அறிவோம். இந்தத் தொற்று யாரிடம் உள்ளது. அது எப்போது யாருக்கு யார் மூலம் பரவும் என தெரியாத நிலையில் நோய்த் தொற்றை தவிர்க்க வேண்டும் என்ற ஒரே நல்ல எண்ணத்தில் தான், கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும் இயல்பான நகர்வுகளுக்கும் தற்போது 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பொது சுகாதார வல்லுநர்கள்
இந்தச் சூழ்நிலையில் தன்னார்வலர்களும் தொண்டு நிறுவனங்களும் தனிப்பட்ட முறையில் உதவி செய்பவர்களும் நோய்த் தொற்றிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும், அதே சமயம் நோய்த் தொற்று பரவவுதை தவிர்க்கவும் முறையான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும். எனவே புயல், வெள்ளம், வறட்சி போன்ற பேரிடர் காலங்களில் உதவுவது போல் தற்போது உதவி செய்ய ஆரம்பித்து விட்டால், நோய்த் தொற்று தான் அதிகமாகும் என்று பொது சுகாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
நிவாரணம்
அதனால்தான் எந்த ஒரு அமைப்பு நிவாரணம் வழங்கினாலும் அதை முறையாக வழங்க அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடமோ மாநகராட்சிகளிடமோ மாநகராட்சி ஆணையரிடமோ மண்டல் அலுவலர்களிடமோ நகராட்சியாக இருந்தால் அந்தந்த நகராட்சி ஆணையரிடமோ பேரூராட்சியாக இருந்தால் செயல் அலுவலரிடமோ, ஊராட்சி ஒன்றியமாக இருந்தால் வட்டார வளர்ச்சி அலுவலரிடமோ வழங்கலாம்.
உணவு
மேலும் இத்தகைய உதவிகளை செய்ய சம்பந்தப்பட்ட வருவாய்த் துறை அதிகாரிகளையும் அணுகலாம். இதை விநியோகிப்பதற்கென அரசால் நியமிக்கப்பட்ட அலுவலர்கள் மூலம் தேவையான அனைவருக்கும் சென்றடையும் வகையிலும், தன்னார்வல அமைப்புகள் வழங்கும் மளிகைப் பொருட்கள், காய்கறிகள். சமைத்த உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை அவர்கள் குறிப்பிடும் பகுதிகளுக்கு அல்லது குறிப்பிடும் நபர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
ஒத்துழைப்பு
இப்பணியில் தன்னார்வலர்களும் மாவட்ட ஆட்சியர்களின் அனுமதியோடு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஈடுபடலாம். அதற்கென சம்பந்தப்பட்ட அலுவலரின் தொலைபேசி மற்றும் கைபேசி எண்களும் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொது மக்களும் மற்ற தொண்டு நிறுவனங்களும் தன்னார்வலர்களும் அரசுக்கு முழு ஒத்துழைப்பை நல்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தன்னார்வலர்கள்
தமிழக முதல்வரின் அவர்களின் உத்தரவின்படி, மாநில அளவில் கொரோனா நிவாரணத்தை ஒருங்கிணைத்து செயல்படுத்த ஏற்படுத்தப்பட்ட 12 குழுக்களில் ஒரு குழு தன்னார்வலர்களின் தனித்திறன் மற்றும் ஆர்வத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்துவதற்கு, மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் தலைமையில் ஏற்படுத்தப்பட்டு இப்பணிகள் சீரிய முறையில் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே முதியோர், மாற்றுத்திறனாளிகள், நம் மாநில மற்றும் இதர மாநில தொழிலாளர்கள், ஆதரவற்றோர் போன்றோருக்கு நிவாரணம் மற்றும் உதவிகள் வழங்கிட, 2500க்கு மேற்பட்ட நிறுவனங்களும், 58 ஆயிரம் தன்னார்வலர்களும் தமிழக அரசிடம் பதிவு செய்து கொண்டு மாவட்ட நிர்வாதத்துடன் இணைந்து சமூக இடைவெளி, பொது சுகாதார பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடித்து நிவாரண உதவிகளை வழங்கிக் கொண்டுதான் இருக்கின்றனர். stopcorona.tn.gov.in என்கிற இணையதளத்தில் பதிவு செய்து கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் நிவாரணம் மற்றும் தன்னார்வலர்களை ஒருங்கிணைப்பதற்காக அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் மூலம் நிவாரணங்கள் ஒருங்கிணைந்து வழங்கப்பட்டு வருகின்றன.
உதவி செய்ய
எனவே அரசின் நோக்கம் உதவி செய்வதைத் தடுப்பது அல்ல. தற்போதைய நோய்த் தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நிவாரண உதவிகள் முறையாகவும், பாதுகாப்பாகவும் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் அரசின் நிலைப்பாடு. இதற்கு ஓரிரு நியாயவிலைக் கடைகளில் கூடும் கூட்டத்தை காரணம் காட்டி நியாயப்படுத்தி பேசுவதும் சரியல்ல. நியாய விலைக் கடைகள், பிற அன்றாட வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் இதர கடைகளில் கூடும் கூட்டத்திலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தியுள்ள இந்த அரசு, அதை தீவிரமாக கண்காணித்தும் வருகிறது.
வழிமுறைகள்
ஏற்கெனவே அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்தி வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளன. சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி செயல்படத் தான் அரசு கேட்டுக் கொண்டுள்ளதே தவிர யாருக்கும் தடை விதிக்கவில்லை. மாறாக விருப்பத்தோடு வரும் தன்னார்வலர்கள் மற்றும் இதர தொண்டு நிறுவனங்களின் நிவாரண உதவிகள், மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து செயல்பட்டு, தேவைப்படும் பொது மக்களுக்கு பாதுகாப்பான முறையில் சென்றடைவதை உறுதி செய்யத்தான் அரசு அறிவுறுத்தியதே தவிர, தடை விதிக்கவில்லை எனறு தெளிவுப்படுத்தப்படுகிறது.
ஒத்துழைப்பு
இந்த நிலையில் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவரும், வைகோ, கே எஸ் அழகிரி போன்ற தலைவர்களும் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு தன்னார்வலர்கள் உதவி செய்வதற்கு அரசு தடை விதித்து விட்டது போல் உண்மைக்குப் புறம்பாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதில் அரசு எந்த விதமான அரசியலும் செய்யவில்லை. கொடிய கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்கும் தமிழக அரசின் இந்த உண்மையான நோக்கத்தை புரிந்து கொண்டு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.