தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம்.. நிர்ணயித்தது தமிழக அரசு
சென்னை: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு தனது அறிக்கையில் கூறியிருக்கையில் கொரோனா தொற்று தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த ஜூன் 3-ஆம் தேதி அதிமுக அரசு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா நோய் தொற்றிக்கு கட்டணமில்லாமல் சிகிச்சைகள் அளிப்பது குறித்து ஓர் ஆணை வெளியிடப்பட்டது.
கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளை அணுகும் நோயாளிகள், தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்களை எழுப்பி வருகிறார்கள். இதனைத் தவிர இந்திய மருத்துவச் சங்கம் தமிழ்நாடு கிளை நிர்வாகிகள் கொரோனா நோய் தொற்று கண்ட நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய கட்டணம் தொடர்பாக கோரிக்கைகளை அரசின் முன் வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளிடமிருந்து பெற அனுமதிக்கப்பட வேண்டிய தினசரி கட்டணங்கள் மற்றும் நிபந்தனைகள் குறித்து தனது அறிக்கையை அரசிடம் அளித்தது. இவ்வறிக்கையை கவனமுடன் ஆய்வு செய்த தமிழ்நாடு அரசு மக்கள் நலன் கருதி கீழ்காணும் கட்டணங்களை நிர்ணயிக்கவும் நிபந்தனைகளை விதிக்கவும் உத்தேசித்து அவ்வாறே ஆணையிடுகிறது.
எப்படி இருக்கிறார் ஜெ. அன்பழகன்.. சிகிச்சை குறித்து நேரில் கேட்டறிந்த மு.க.ஸ்டாலின்
பொது வார்டு, அறிகுறிகள் இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறிகளுடன் கூடிய நபர்கள் நாளொன்று ரூ 5000 முதல் 7500 வரை நிர்ணயிக்கப்படுகிறது. அது போல் தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற ரூ 15 ஆயிரம் கட்டணமாக வசூலிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள இக்கட்டணங்கள் அதிகபட்ச கட்டணமாகும். இக்கட்டணத்திற்கு மேலான தொகையை நோயாளிகளிடமிருந்து வசூலிக்கக் கூடாது. கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள உலகளாவிய மருத்துவ பேரிடர் காலத்தில் அரசு மருத்துவமனைகளும் இணைந்து செயல்படும். இது போன்ற மக்கள் நலன் காக்கும் நடவடிக்கைகளின் மூலம் கொரோனா சிகிச்சை முறைகள் மேலும் வலுப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.